இரண்டு படங்களே நடித்த நடிகை நிதி அகர்வாலுக்கு சிலை வைத்து பாலாபிஷேகம்

தமிழில் இரண்டு படங்களே நடித்த நடிகை நிதி அகர்வாலுக்கு ரசிகர்களால் கோவில் கட்டப்பட உள்ளது.

Update: 2021-02-15 17:11 GMT
சென்னை

தமிழக ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த நடிகைகளுக்கு சிலை வைப்பதோ கோவில் கட்டுவதோ புதிதல்ல. நடிகை குஷ்பு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த சமயத்தில் அவருக்கு கோவில் கட்டி கொண்டாடினர் ரசிகர்கள். அதேபோல் நடிகை நமிதா உள்ளிட்ட ஒரு சில நடிகைகளுக்கு ரசிகர்களால் கோவில் கட்டப்பட்டதாகவும் கூறப்படுகிறது.  தற்போது இரண்டு படங்களில் மட்டுமே நடித்திருக்கும் நடிகை நிதி அகர்வாலுக்கு கோவில் கட்ட இருப்பதை அறிந்து மற்ற நடிகைகளின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் குமுறி வருகிறார்கள்.

2017-ம் ஆண்டு இந்தியில் வெளியான முன்னா மைக்கேல் படத்தில் நடித்து சினிமாவுக்கு  அறிமுகமானவர் நிதி அகர்வால். அதைத்தொடர்ந்து தெலுங்கில் ஸ்மார்ட் சங்கர், மிஸ்டர் மஞ்சு உள்ளிட்ட படங்களில் நடித்த அவர் தமிழில் சிம்புவுடன் ஈஸ்வரன், ஜெயம் ரவியுடன் பூமி ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

தற்போது பவன் கல்யாணுக்கு ஜோடியாக நடித்து வரும் நிதி அகர்வால் மகிழ்திருமேனி இயக்க இருக்கும் புதிய படத்திலும் நடிக்க இருக்கிறார். தமிழில் நிதி அகர்வால் நடித்து இரண்டு படங்கள் மட்டுமே வெளியாகியிருக்கும் நிலையில் சென்னை காட்டுப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ரசிகர்கள் அவருக்கு சிலை வைத்து பாலாபிஷேகம் செய்துள்ளனர்.

மேலும் கோவில் கட்ட திட்டமிருப்பதாகவும் சிலை வடிவமைப்பு பணிகள் நிறைவடைந்திருப்பதால் அதற்கு பாலாபிஷேகம் செய்திருப்பதாகவும் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையறிந்த நடிகை நிதி அகர்வால், நான் எதிர்பார்க்காத ஒன்று. மிகச்சிறந்த காதலர் தின பரிசு. எனது ரசிகர்களை நான் மிகவும் நேசிக்கிறேன். இதைப்போன்ற நிகழ்வுகளால் இன்னும் நல்ல படங்களில் நடிக்க வேண்டும் என்ற உற்சாகம் ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு நன்றி கூற விரும்புகிறேன்.” என்று கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்