கதாநாயகிகள் நடிக்க தயங்கும் ‘வில்லி’ வேடத்தில் சிம்ரன் துணிச்சல்

வட மாநிலங்களில் வெற்றிகரமாக ஓடிய ‘அந்தாதூன்’ என்ற இந்தி படம், பிரசாந்த் கதாநாயகனாக நடிக்க, ‘அந்தகன்’ என்ற பெயரில் தமிழில் படமாகி வருகிறது.

Update: 2021-04-25 06:22 GMT
வட மாநிலங்களில் வெற்றிகரமாக ஓடிய ‘அந்தாதூன்’ என்ற இந்தி படம், பிரசாந்த் கதாநாயகனாக நடிக்க, ‘அந்தகன்’ என்ற பெயரில் தமிழில் படமாகி வருகிறது. இதில் பிரசாந்துடன் கார்த்திக், சமுத்திரக்கனி, யோகி பாபு, பிரியா ஆனந்த் உள்பட பலர் நடிக்கிறார்கள்.

எந்த கதாநாயகியும் நடிக்க தயங்குகிற வில்லி வேடத்தில், சிம்ரன் நடிக்கிறார். கணவருடன் வாழ்ந்து கொண்டே வேறு ஒரு ஆணுடன் கள்ள தொடர்பு வைத்திருப்பவராக அவருடைய கதாபாத்திரம் அமைக்கப்பட்டு இருக்கிறது. (இந்த வேடத்தில், இந்தி படத்தில் தபு நடித்து இருந்தார்.) சிம்ரனின் துணிச்சலையும், நடிப்பு திறனையும் டைரக்டரும், நடிகருமான தியாகராஜன் உள்பட படக்குழுவினர் அனைவரும் பாராட்டுகிறார்கள். ‘அந்தகன்’ படத்துக்காக அவர் 70 நாட்கள் ‘கால்சீட்’ கொடுத்து இருக்கிறார். ஏறக்குறைய படப்பிடிப்பு முடிவடையும் நிலையில் இருக்கிறது.

படத்தில் இடம்பெறும் சில முக்கிய காட்சிகளை போலந்து நாட்டில் படமாக்க இருப்பதாக டைரக்டர் தியாகராஜன் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:-

‘‘அந்தகன் படத்தில் கார்த்திக் கனமான வேடம் ஒன்றில் நடிக்கிறார். அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று குணம் அடைந்ததும் அவர், ‘அந்தகன்’ படப்பிடிப்பில் கலந்து கொண்டார். படத்தில் சமுத்திரக்கனி போலீஸ் அதிகாரியாகவும், யோகி பாபு ஆட்டோ டிரைவராகவும் வருகிறார்கள்.

வெற்றி பெறுவதற்கான அம்சங்கள் அத்தனையும் இந்த படத்தில் இருக்கிறது’’ என்கிறார், டைரக்டர் தியாகராஜன்.

மேலும் செய்திகள்