மாயாவதி பற்றி அவதூறு: ஐ.நா. தூதர் பதவியில் இருந்து நடிகர் நீக்கம்

சமீபத்தில் பிரபுதேவா இயக்கத்தில் வெளியான ராதே படத்தில் சல்மான்கானுடன் நடித்து இருந்தார்.

Update: 2021-05-31 22:32 GMT
இந்தி திரையுலகில் முன்னணி கதாநாயகனாக இருப்பவர் ரன்தீப் ஹூடா. சமீபத்தில் பிரபுதேவா இயக்கத்தில் வெளியான ராதே படத்தில் சல்மான்கானுடன் நடித்து இருந்தார். ரன்தீப் ஹூடா, சில வருடங்களுக்கு முன்பு உத்தரபிரதேச முன்னாள் முதல்-மந்திரி மாயாவதி பற்றி ஆபாசமாக பேசிய சர்ச்சை வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து பலரும் ரன்தீப்பை கண்டித்தனர். மாயாவதியை இழிவுபடுத்துவதுபோல் பேசியதற்காக அவரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வற்புறுத்தினர்.

இந்த வீடியோ சர்ச்சையால் ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் கீழ் செயல்படும் புலம் பெயர் வன விலங்குகள் பாதுகாப்பு அமைப்பின் தூதர் பொறுப்பில் இருந்து ரன்தீப் ஹூடா நீக்கப்பட்டு உள்ளார்.

இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் “எங்கள் அமைப்பில் தூதராக பொறுப்பு வகிக்கும் ரன்தீப் ஹூடா பேசிய வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி உள்ளது. அதில் அவர் பேசிய கருத்துக்கள் எங்கள் அமைப்பு மற்றும் ஐக்கிய நாடுகள் கொள்கைகளுக்கு தொடர்பு இல்லாத வகையில் அவதூறாக உள்ளது. இதையடுத்து இந்த அமைப்பின் தூதராக அவர் செயல்பட மாட்டார்’’ என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. இது இந்தி பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்