சர்வதேச பட விழாவில் நயன்தாரா படம் திரையிட தேர்வு

நடிகை நயன்தாரா காதலர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து கூழாங்கல் என்ற படத்தை தயாரித்துள்ளார். இந்த படத்தை பி.எஸ்.வினோத் ராஜ் இயக்கி உள்ளார்.

Update: 2021-05-31 22:51 GMT
குடிகார தந்தைக்கும், மகனுக்குமான உறவை மையப்படுத்தி கதை உருவாகி உள்ளது. “கூழாங்கல் படம் ஏற்படுத்திய தாக்கம் ஆழமானது. இத்திரைப்படத்தை சர்வதேச திரைப்பட விழாக்களுக்கு கொண்டு செல்வது என முடிவு செய்துள்ளோம்'' என்று நயன்தாரவும், விக்னேஷ் சிவனும் தெரிவித்து இருந்தனர். இதையடுத்து கூழாங்கல் படம் நெதர்லாந்தில் உள்ள ரோட்டர்டம் சர்வதேச திரைப்பட விழாவில் போட்டி பிரிவில் திரையிடப்பட்டு சிறந்த படத்துக்கான விருதை பெற்றது. ரோட்டர்டாம் சர்வதேச விழாவில் விருது பெற்ற முதல் தமிழ் படம் கூழாங்கல் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் நியூயார்க்கில் நடந்த டைரக்டர்ஸ் நியூ திரைப்பட விழாவிலும் கூழாங்கல் திரையிடப்பட்டு சிறந்த திரைப்படத்துக்கான விருதை வாங்கியது. இந்த நிலையில் உக்ரைனில் ஆண்டுதோறும் நடைபெறும் கெய்வ் மோலோடிஸ்ட் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடவும் கூழாங்கல் படம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. இந்த படத்துக்கு கிடைத்த இன்னொரு சர்வதேச அங்கீகாரமாக இது கருதப்படுகிறது.

மேலும் செய்திகள்