தமிழ் படத்தில் முதன் முதலாக ஹேமமாலினி

சூர்யா ஜோடியாக நடிகை ஹேமமாலினியை நடிக்க வைக்க முயற்சி நடக்கிறது.

Update: 2021-11-21 08:43 GMT
தமிழ் திரையுலகின் முன்னணி டைரக்டர்களில் ஒருவர் பாலா. இவருடைய டைரக்‌ஷனில் முதன் முதலாக ‘நந்தா’ என்ற படத்தில் சூர்யா நடித்தார். அதைத்தொடர்ந்து ‘பிதாமகன்’ என்ற படத்திலும் பாலா டைரக்‌ஷனில் சூர்யா நடித்தார். 3-வது முறையாக இருவரும் ஒரு புதிய படத்தில் இணைந்து பணிபுரிகிறார்கள்.

இந்த படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. இதில் சூர்யா கதாநாயகனாக நடிக்கிறார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி பாலா டைரக்‌ஷன் செய்கிறார். படத்தில் சூர்யா வயதான தோற்றத்தில் முதியவராக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக இந்திய அளவில் புகழ்பெற்ற நடிகை ஹேமமாலினியை நடிக்க வைக்க முயற்சி நடக்கிறது.

இந்த படத்தில், ஒரு கனமான பெண் கதாபாத்திரம் உள்ளது. அதில் ஹேமமாலினி நடித்தால் பொருத்தமாக இருக்கும் என்று டைரக்டர் பாலா கருதுகிறார். சூர்யாவுக்கு ஜோடியாக ஹேமமாலினியை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

ஹேமமாலினி ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்தவர். அவர் முதன் முதலாக தமிழ் படத்தில் நடிக்க முயற்சி செய்தார். அவருக்கு சினிமாவுக்கு ஏற்ற முகமல்ல என்று அவரை தமிழ் பட டைரக்டர்கள் புறந்தள்ளினர். அதன்பிறகு ஹேமமாலினி இந்தி பட உலகுக்கு சென்று பிரபல கதாநாயகி ஆனார். இந்திய அளவில் ரசிகர்களின் கனவுகன்னியாக திகழ்ந்தார்.

பிரபல இந்தி நடிகர் தர்மேந்திராவை காதல் திருமணம் செய்துகொண்டு 2 மகள்களுக்கு தாயானார். தற்போது அரசியலிலும் பிரபலமாகி வருகிறார்.இந்தநிலையில் அவரை தமிழ் படத்தில் நடிக்க வைக்க டைரக்டர் பாலா முயற்சி செய்கிறார். சூர்யா ஜோடியாக தமிழ் படத்தில் நடிக்க ஹேமமாலினியும் விருப்பமாக இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்