கேன்ஸ் திரைப்பட விழாவில் முதல் பரிசு வென்ற 'சன்பிளவர்ஸ்' இந்திய குறும்படம்

இயக்குநர் சித்தானந்த் எஸ் நாயக் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சன்பிளவர்ஸ்’ குறும்படம் கேன்ஸ் திரைப்பட விழாவில் முதல் பரிசை வென்றது.

Update: 2024-05-24 12:07 GMT

பிரான்ஸ் நாட்டில் கடந்த மே 14-ம் தேதி தொடங்கிய கேன்ஸ் திரைப்பட விழா நாளை நிறைவு பெறுகிறது. இந்தத் திரைப்பட விழாவின் பல்வேறு பிரிவுகளில் போட்டியிட பல இந்தியத் திரைப்படங்கள் தேர்வாகி திரையிடப்பட்டது. அதில் முதல் மற்றும் மூன்றாவது இடத்தை இந்திய குறும்படங்கள் பிடித்திருப்பது ரசிகர்களை குதூகலமடையச் செய்திருக்கிறது. 

இயக்குநர் சித்தானந்த் எஸ் நாயக் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'சன்பிளவர்ஸ்'. 16 நிமிடங்கள் ஓடக்கூடிய புனேவைச் சேர்ந்த பிலிம் அண்ட் டெலிவிஷன் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா (FTII) மாணவர்களின் தயாரிப்பில் உருவான குறும்படம் இது.

திருடப்பட்ட சேவலை மையமாகக் கொண்டு இந்தக் கதை நகர்கிறது. 77-வது கேன்ஸ் திரைப்பட விழாவின் சிறந்த குறும்படத்திற்கான லா சினிப் பிரிவில் இடம் பெற்ற இந்தியத் திரைப்படப் பள்ளியின் ஒரே திரைப்படமாக இது உள்ளது.

திரையிடல் முடிந்த பிறகு 'சன்பிளவர்ஸ்' குறும்படம் லா சினிப் பிரிவில் முதல் பரிசு பெற்றதாக நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதே பிரிவில் மான்சி மகேஸ்வரியின் 'பன்னிஹுட்' மூன்றாம் பரிசைப் பெற்றது.

'பன்னிஹுட்' லண்டனைச் சேர்ந்த திரைப்படம் என்றாலும், மீரட்டைச் சேர்ந்த இந்தியரால் தயாரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. முதல் பரிசுக்கு 15,000 யூரோக்கள் மற்றும் இரண்டாவது மற்றும் மூன்றாவது பரிசுகளுக்கு முறையே 11,250 யூரோக்கள் மற்றும் 7,500 யூரோக்கள் வழங்கப்படும்.

Tags:    

மேலும் செய்திகள்