அரசியலுக்கு வர எண்ணமா? நடிகை திரிஷா விளக்கம்

Update: 2023-04-19 02:22 GMT

நடிகை திரிஷா அரசியலுக்கு வர ஆலோசிப்பதாக ஏற்கனவே தகவல்கள் பரவின. தற்போது திரிஷா குந்தவை கதாபாத்திரத்தில் நடித்துள்ள பொன்னியின் செல்வன்-2 படம் வருகிற 28-ந்தேதி திரைக்கு வரும் நிலையில் அதை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். சென்னையில் திரிஷா பேட்டி அளித்தபோது அவரிடம், "சாதுரியமாக அரசியல் காய்களை நகர்த்தும் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்துள்ள உங்களுக்கு எதிர்காலத்தில் அரசியலுக்கு வரும் எண்ணம் உள்ளதா?" என்று கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதில் அளித்து திரிஷா கூறும்போது, "எனக்கு சத்தியமாக அரசியல் ஆசை இல்லை. அரசியலுக்கு வருவது தொடர்பான சிந்தனை எனக்கு அறவே இல்லை'' என்றார்.

முன்னதாக கோவையில் நடந்த நிகழ்ச்சியில் உங்கள் திருமணம் எப்போது? திருமணத்துக்கு நாங்கள் வரலாமா? என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த திரிஷா ரசிகர்களை நோக்கி கையை நீட்டி "எனது உயிர் அவர்களோடுதான். இப்போதைக்கு அப்படியே இருந்துவிட்டு போகட்டும்'' என்றார்.

பொன்னியின் செல்வன் படத்தில் வரும் அருண்மொழி வர்மன், ஆதித்த கரிகாலன், வந்தியத்தேவன் ஆகியோரில் முதல் இடம் யாருக்கு என்று கேட்டபோது, இது பொன்னியின் செல்வன்-2 பட நிகழ்ச்சி என்பதால் என் இதயத்தில் இப்போது இருப்பது வந்தியத்தேவன்தான்'' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்