நெஞ்சுவலியால் சுருண்டு விழுந்த 'வேட்டைக்காரன்' பட நடிகர்

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் சாயாஜி ஷிண்டே நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Update: 2024-04-12 11:19 GMT

சதாரா,

மராத்தி பட உலகில் பிரபலமான நடிகராக இருந்து வருபவர் சாயாஜி ஷிண்டே. இவர் தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழி படத்தில் நடித்து உள்ளார். தமிழில் 'பூவெல்லாம் உன் வாசம்', 'அழகி', 'பாபா', 'வேலாயுதம்', 'அழகிய தமிழ் மகன்', 'வேட்டைக்காரன்', 'சந்தோஷ் சுப்பிரமணியம்' உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் சாயாஜி ஷிண்டே. தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாள படங்களிலும் வில்லன், நகைச்சுவை மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்து இருக்கிறார்.

ஐஏஎஸ் அதிகாரி ஞானராஜசேகரன் இயக்கிய 'பாரதி' திரைப்படத்தில் சுப்பிரமணிய பாரதி கேரக்டரில் நடித்து தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் சாயாஜி ஷிண்டே. இப்படத்தில் பாரதியாராக மிக அற்புதமான நடிப்பை சாயாஜி ஷிண்டே வழங்கியதால் திரையுலகினரால் பாராட்டப்பட்டார்.

மகாராஷ்டிரா மாநிலம் சதாரா மாவட்டத்தை சேர்ந்த சாயாஜி ஷிண்டே, நாடக நடிகராக இருந்து திரையுலகில் நுழைந்தவர். நடிப்பு மட்டுமின்றி பசுமை ஆர்வலரான சாயாஜி ஷிண்டே கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில் வீட்டில் இருந்த சாயாஜி ஷிண்டேவிற்கு நேற்று நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து அவரை, குடும்பத்தினர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இதையடுத்து சதாராவில் உள்ள மருத்துவமனையில் சாயாஜி ஷிண்டே சிகிச்சை பெற்று வருகிறார். அவரது இதயக்குழாய்களில் ஒன்று 99 சதவீதம் அடைப்பட்டுவிட்டதாகவும் , இதன் காரணமாக அவருக்கு உடனடியாக ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை செய்யப்பட்டதாகவும், தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளது என்றும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.



Tags:    

மேலும் செய்திகள்