சூர்யாவின் 'புறநானூறு'- படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்திவைப்பு

சூர்யாவின் 43-வது படத்துக்கு 'புறநானூறு' என்று பெயரிடப்பட்டுள்ளது.

Update: 2024-03-29 10:21 GMT

சென்னை,

இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கடந்த 2020-ம் ஆண்டு வெளியான 'சூரரைப்போற்று' திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தேசிய விருதுகளையும் வென்றிருந்தது. இந்த நிலையில், இந்த கூட்டணி மீண்டும் புதிய படம் ஒன்றில் இணைந்து பணியாற்றி வருகிறது.

இந்த படத்துக்கு 'புறநானூறு' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் துல்கர் சல்மான், நஸ்ரியா, விஜய் வர்மா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படம் ஜி.வி. பிரகாஷின் 100-வது படமாகும்.

இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி, படத்தின் கதைக்கு மறுவடிவம் கொடுப்பதற்காக கூடுதல் நேரம் தேவைப்படுவதால் படம் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக சுதா கொங்கரா இப்படத்திற்கு கூடுதல் நேரம் தேவைப்படுவதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சில தினங்களுக்கு முன்பு சூர்யாவின் 44-வது படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்தப் படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் நடிக்கும் பிற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்