சிவகார்த்திகேயன் நடிக்கும் 'அமரன்' படத்தின் படப்பிடிப்பு நிறைவு

இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் 'அமரன்'.

Update: 2024-05-25 08:42 GMT

சென்னை,

சிவகார்த்திகேயன் நடிப்பில் அண்மையில் வெளியான 'அயலான்' திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிக்கும் அடுத்த படத்தை 'ரங்கூன்' படத்தின் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். இந்த படத்திற்கு 'அமரன்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் நடிகை சாய் பல்லவி கதாநாயகியாக நடிக்கிறார்.

கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் காஷ்மீரில் படமாக்கப்பட்டுள்ளன. இந்த படத்தில் 'முகுந்தன்' என்ற கதாபாத்திரத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் முதல் முறையாக ராணுவ அதிகாரியாக நடிக்கிறார். சமீபத்தில் 'அமரன்' படத்தின் டீசர் வெளியாகி கவனம் பெற்றது.

காஷ்மீரில் உள்ள இந்திய ராணுவத்திற்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நடக்கும் மோதலை மையமாக கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் புதிய அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி, விறுவிறுப்பாக நடைபெற்று வந்த 'அமரன்' படத்தின் படப்பிடிப்பு தற்போது  நிறைவடைந்ததாக படக்குழு அறிவித்துள்ளது. இதனை வீடியோ ஒன்றை வெளியிட்டு படக்குழு தெரிவித்துள்ளது. விரைவில் 'அமரன்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்