எனது படங்களை தோல்வி படம் என்று அவதூறு பரப்புகிறார்கள் - கங்கனா ரணாவத்

தனக்கு எதிராக பணம் கொடுத்து அவதூறு பரப்புவதாக நடிகை கங்கனா ரணாவத் குற்றம் சாட்டி உள்ளார்

Update: 2023-08-12 07:51 GMT

தமிழில் 'தாம்தூம்', 'தலைவி' படங்களில் நடித்துள்ள கங்கனா ரணாவத் தற்போது சந்திரமுகி 2-ம் பாகம் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தியில் முன்னணி கதாநாயகியாக வலம் வருவதோடு சர்ச்சை கருத்துகள் வெளியிட்டும் பரபரப்பு ஏற்படுத்துகிறார்.

இந்தநிலையில் தனக்கு எதிராக பணம் கொடுத்து அவதூறு பரப்புவதாக தற்போது குற்றம் சாட்டி உள்ளார். இதுகுறித்து கங்கனா கூறும்போது, "எனது படங்களின் வசூல் நிலவரம் குறித்து தவறான தகவல்கள் பரப்புகின்றனர். இப்படி செய்பவர்களின் ஆன்மா சாந்தி அடையட்டும். இதற்கு பின்னால் ஒரு மாபியா கும்பல் இருக்கிறது. அவர்கள் எனது படங்கள் குறித்து மோசமான தகவல்களை பரப்பி மகிழ்ச்சி அடைகிறார்கள்.

ரூ.150 கோடி வசூல் சாதனை செய்த எனது படங்களை தோல்வி படம் என்று பிரசாரம் செய்கின்றனர். தினமும் எனது படங்கள் தோல்வி என்று 10 முதல் 15 கட்டுரைகள் வருகின்றன. இதுபோன்ற கேவலமான எண்ணம் இவர்களுக்கு எப்படித்தான் வருகிறதோ. இரவும் பகலும் திட்டமிட்டு மற்றவர்களை கெட்டவர்களாகக் காட்ட தங்களின் சொந்த பணத்தை செலவிடுகின்றனர்''என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்