கூர்கா சமூகத்தை சேர்ந்த யோகி பாபுவுக்கு போலீசாக ஆசை: படம் "கூர்கா" - விமர்சனம்

வணிக வளாகத்தில் இருக்கும் யோகிபாபுவும், சார்லியும் கடத்தல் கும்பலிடம் இருந்து பணய கைதிகளை மீட்க எடுக்கும் முயற்சிகளும் அதில் வென்றார்களா? என்பதும் மீதி கதை. படம் கூர்கா சினிமா விமர்சனம்.

Update: 2019-07-20 17:36 GMT
கூர்கா சமூகத்தை சேர்ந்த யோகி பாபுவுக்கு போலீசாக ஆசை. அதற்கான தகுதி தேர்வில் தோற்கிறார். அதன் பிறகு மனோபாலா நடத்தும் செக்யூரிட்டி நிறுவனத்தில் வேலைக்கு சேர்கிறார். பெரிய வணிக வளாகம் ஒன்றில் அவருக்கு பணி ஒதுக்கப்படுகிறது. அங்கு யோகா பயிற்சிக்கு வரும் அமெரிக்க பெண் தூதர் எலிசா மீது யோகிபாபுவுக்கு காதல் வருகிறது.

கடத்தல் கும்பல் வணிக வளாகத்தில் புகுந்து அங்குள்ள தியேட்டரில் படம் பார்க்கும் எலிசாவையும், போலீஸ் குடும்பத்தினரையும் துப்பாக்கி முனையில் பணய கைதியாக பிடிக்கின்றனர். அவர்களை வைத்து அரசிடம் பணம் கேட்டு பேரம் பேசுகின்றனர். சிலரை சுட்டு கொல்லவும் செய்கிறார்கள்.

வணிக வளாகத்தில் இருக்கும் யோகிபாபுவும், சார்லியும் கடத்தல் கும்பலிடம் இருந்து பணய கைதிகளை மீட்க எடுக்கும் முயற்சிகளும் அதில் வென்றார்களா? என்பதும் மீதி கதை.

யோகிபாபு வழக்கமான நக்கல், நய்யாண்டி பேசுகிறார். அமெரிக்க தூதருடன் காதல் வயப்படும் காட்சிகள் சுவாரஸ்யம். வணிக வளாகத்துக்குள் மறைந்திருந்து கடத்தல் கும்பலை மிரட்டுவது, வெடிகுண்டு வயரை தவறாக கத்தரிப்பது, தற்கால சமூக அரசியல் விஷயங்கள் பற்றி பஞ்ச் பேசும் காட்சிகள் சிரிக்க வைக்கின்றன. அவரது காவல் கூட்டாளியாக வரும் சார்லி அனுபவ நடிப்பால் கவர்கிறார்.

எலிசா கவர்ச்சி விருந்தளிக்கிறார். போலீஸ் அதிகாரிகளாக வரும் ரவிமரியா, ஆனந்தராஜ், அரசியல்வாதியாக வரும் மயில்சாமி கலகலப்பூட்டுகிறார்கள். ராஜ்பரத் அமைதியான வில்லனாக மிரட்டுகிறார். ஆரம்ப காட்சிகள் வலுவின்றி நகர்கின்றன. யோகிபாபுவின் போலீஸ் தேர்வு பயிற்சிகளும் நெளிய வைக்கின்றன.

வணிக வளாகத்துக்குள் கடத்தல் கும்பல் நுழைந்த பிறகு கதை விறுவிறுப்புக்கு மாறுகிறது.

சிரிக்க வைக்கும் நோக்கில் காட்சிகளை நகர்த்தி இருக்கிறார் இயக்குனர் சாம் ஆண்டன்.

கிருஷ்ணன் வசந்த் கேமரா, காட்சிகளை அழகாக்கி இருக்கிறது. ராஜ் ஆர்யன் பின்னணி இசை ஒன்ற வைக்கிறது.

மேலும் செய்திகள்