இந்த மலைமாதிரி உன்னை பார்த்துக்குவேன் என்று காதலை சொல்லும் நடிகை - தேன் விமர்சனம்

தேன் எடுப்பவராக வரும் தருண்குமார், வாய்பேசாத மகளின் பாசமான தந்தையாக மனைவியை காப்பாற்ற அதிகாரிகளிடம் மண்டியிட்டு கெஞ்சும் அன்பான கணவர் “தேன்” படத்தின் விமர்சனம் பார்க்கலாம்.

Update: 2020-12-20 19:12 GMT
குறிஞ்சிக்குடி மலைப்பகுதி கிராமத்தில் வசிக்கும் அபர்ணதியின் தந்தை உடல்நலன் குன்றி படுத்த படுக்கையாக இருந்தார். அவரை மலையில் தேன் எடுப்பதை தொழிலாக செய்யும் தருண்குமார் தேன் மருந்து கொடுத்து காப்பாற்றுகிறார். இதனால் அபர்ணதிக்கும், தருண் குமாருக்கும் காதல் மலர்ந்து திருமணத்துக்கு தயாராகும்போது சாமி வரம் கொடுக்கவில்லை என்று ஊர் பெரியவர் திருமணம் செய்து வைக்க மறுக்கிறார். ஆனால் அபர்ணதி ஊராரை எதிர்த்து தருண்குமாரை திருமணம் செய்து கொள்கிறார். ஒரு பெண் குழந்தை பிறக்கிறது. அதன்பிறகு விதி அவர்கள் வாழ்க்கையை புரட்டிப்போடுகிறது. அபர்ணதி வயிற்று வலியால் துடிக்கிறார். அவரை தருண் குமார் நகரத்தில் இருக்கும் ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்கிறார். சிகிச்சை அளிக்க மருத்துவ காப்பீடு அட்டை, ஆதார் அட்டை என்று அதிகாரிகள் அலைக்கழிக்கின்றனர். அவற்றை பெற்று அபர்ணதியை காப்பாற்றினாரா என்பது கிளைமாக்ஸ்.

தேன் எடுப்பவராக வரும் தருண்குமார் மலை வாழ்க்கையை நேசிக்கும் வெள்ளந்தியாக வாய்பேசாத மகளின் பாசமான தந்தையாக மனைவியை காப்பாற்ற அதிகாரிகளிடம் மண்டியிட்டு கெஞ்சும் அன்பான கணவராக வாழ்ந்து இருக்கிறார். இந்த மலைமாதிரி உன்னை பார்த்துக்குவேன் என்று காதலை சொல்லும் அபர்ணதி மனதில் நிற்கிறார். முடிவு சோகம். கயில்தேவராஜ், அருள்தாஸ், பாவா லட்சுமணன், வாய்பேசாத குழந்தையாக வரும் அனுஸ்ரீ அனைவரும் கதாபாத்திரங்களில் நிறைவு. அரசு திட்டங்களின் பலன்களை பெற முடியாத சாமானியனின் வாழ்வியலை அழுத்தமான கதை, உயிரோட்டமான கதாபாத்திரங்களுடன் காட்சிப்படுத்தி திறமையான இயக்குனராக பளிச்சிடுகிறார் கணேஷ் விநாயகன். கிளைமாக்ஸ் நெஞ்சை பிழிகிறது. கார்ப்பரேட் கம்பெனியின் பாதிப்புகளை வலுவாக சொல்லி இருக்கலாம். சுகுமாரின் கேமரா மலைகிராமத்தின் அருவி, பச்சை பசேல் அழகை அள்ளியுள்ளது. சனத் பரத்வாஜ், இசையும் பலம்.

மேலும் செய்திகள்