வெவ்வேறு சம்பவங்களை கொண்ட 6 கதைகள் - கசடதபற சினிமா விமர்சனம்

பிரேம்ஜி மற்றும் ரெஜினா கசன்ட்ரா ஜோடி நடித்துள்ள கசடதபற படத்தின் விமர்சனம்.

Update: 2021-08-30 14:30 GMT
வெவ்வேறு சம்பவங்களை கொண்ட 6 கதைகள். ஒன்றோடு ஒன்று தொடர்புடைய அந்த 6 கதைகளும் ‘கிளைமாக்ஸ்’சில், ஒரு புள்ளியில் இணைகின்றன. பிரேம்ஜி ஒரு ஏழை நடுத்தரவாசி. அவருக்கு ஸ்ரீகிருஷ்ண பகவான் உதவுகிறார். பிரேம்ஜியின் நேர்மையையும், நல்ல குணத்தையும் பார்த்து ரெஜினா கசன்ட்ரா காதல் வசப்படுகிறார். திருமணம் செய்துகொள்ள முன்வருகிறார். பிரேம்ஜி மீது திருட்டு கதை ஜோடித்து இருவரையும் பிரிக்க முயற்சி செய்கிறார்கள், சாதி வெறியர்கள்.

இப்படி கதை தொடங்கி போதை பவுடர், கடத்தல், போலி மருந்து, குழந்தைகள் மரணம், கோர்ட்டு வழக்கு என்று பயணித்து, நேர்மை என்றும் ஜெயிக்கும் என நீதிபோதனை செய்கிறது, படம். சந்தீப் கிசன், ஹரிஸ் கல்யாண், சாந்தனு, சங்கிலி முருகன், பிரியா பவானி சங்கர், விஜயலட்சுமி, வெங்கட் பிரபு, யூகி சேது, பஞ்சு சுப்பு, செந்தில் குமரன், பிருத்விராஜ் என படம் முழுக்க நட்சத்திர கூட்டம். கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான நடிகர்களை தேடிப்பிடித்து நடிக்க வைத்திருப்பதும், 6 கதைகளுக்கும் தொடர்பு ஏற்படுத்தி இருப்பதும் டைரக்டர் சிம்புதேவனின் சாமர்த்தியம். பிரேம்ஜிக்கு ஸ்ரீகிருஷ்ண பகவான் (யூகி சேது) உதவுவது, ‘அறை எண் 305-ல் கடவுள்’ படத்தை நினைவூட்டுகிறது. இடைவேளை வரை டுமீல்...டுமீல்...சத்தம் அதிகம். அப்புறம் கதை உருக்கமான ரூட்டுக்கு மாறுகிறது. விஜயலட்சுமி, குழந்தை, வெங்கட்பிரபு கதை படத்துடன் ஒன்ற செய்கிறது.

மேலும் செய்திகள்