கிருஷ்ண ஜெயந்தி: கள்ளழகர் கோவிலில் உறியடி உற்சவம்

மதுரை கள்ளழகர் கோவிலில் உறியடி உற்சவ விழா நடந்தது.;

Update:2024-08-28 03:23 IST

மதுரை,

மதுரை மாவட்டம் அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. இதைதொடர்ந்து நேற்று மாலையில் உறியடி உற்சவ விழா நடந்தது.

இதையொட்டி மூலவர் சன்னதியில் இருந்து கள்ளழகர் சகல பரிவாரங்களுடன் புறப்பாடாகி 18-ம் படி கருப்பணசாமி கோவில் அருகில் உள்ள உறியடி மண்டபத்திற்கு முன்பாக வந்து எழுந்தருளினார். அங்கு சுவாமி முன்பு உறியடி நிகழ்வு நடந்தது. அப்போது பட்டர்களின் வேத மந்திரங்கள், மேள தாளம் முழங்க சுவாமிக்கு பூஜைகள் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

தொடர்ந்து கள்ளழகர் பெருமாள் அதே பரிவாரங்களுடன் கோவில் யானை சுந்தரவல்லி முன் செல்ல, தீவட்டியுடன் புறப்பாடாகி மூலவர் சன்னதி சென்று சுவாமி இருப்பிடம் சேர்ந்தார். விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழுவினரும், கோவில் நிர்வாகத்தினரும் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்