பத்மாவத்தை நிறுத்துங்கள் அல்லது நாங்கள் தீயில் நுழைவோம் ராஜஸ்தான் பெண்கள் எச்சரிக்கை

பத்மாவத்தை நிறுத்துங்கள் அல்லது நாங்கள் தீயில் நுழைவோம், ராஜஸ்தானை சேர்ந்த நூற்றுக்கணக்கான பெண்கள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர். #Padmaavat #SanjayLeelaBhansali #Rajputwomen #Threaten

Update: 2018-01-22 08:19 GMT
நொய்டா, 

நடிகை தீபிகா படுகோனே நடித்த பத்மாவதி திரைப்படத்துக்கு ராஜபுத்திர வம்சத்தினர் மற்றும் இந்து அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதை தொடர்ந்து அந்த படம் ‘பத்மாவத்’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டும், காட்சிகளில் திருத்தம் செய்யப்பட்டும் தணிக்கை குழுவுக்கு அனுப்பப்பட்டது.
இதையடுத்து தணிக்கை குழுவினர்   படத்துக்கு ‘யுஏ’ சான்றிதழ் வழங்கி அனுமதி அளித்தனர். இதைத் தொடர்ந்து அந்த படம் வருகிற 25-ந்தேதி திரையிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

ராஜஸ்தான், குஜராத், அரியானா, மத்திய பிரதேசம் ஆகிய பா.ஜனதா ஆளும் 4 மாநிலங்கள் ‘பத்மாவத்’ படத்துக்கு தடை விதித்தது. சுப்ரீம்கோர்ட்டு இந்த தடையை நீக்கி இருந்தது.

இந்த  மாநிலங்களில் படம் வெளியிடும்போது சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள  வேண்டும் என்றும்  சுப்ரீம்கோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது.

இந்த நிலையில் உத்தர பிரதேச மாநிலத்தில் ‘பத்மாவத்’ படத்துக்கு எதிராக நடந்த போராட்டம் கலவரமாக மாறியது. கர்னி சேனா அமைப்பினர் ‘பத்மாவத்’ படத்தை வெளியிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து  நொய்டாவிலும் போராட்டம் நடத்தினார்கள். அவர்கள் கைகளில் கம்புகளை வைத்துக் கொண்டு குர்கான் சாலையில் வாகனங்களை மறித்து அடித்து நொறுக்கினார்கள். அங்குள்ள சுங்க சாவடியை  அந்த அமைப்பை சேர்ந்தவர்கள் அடித்து நொறுக்கினார்கள்.

ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திரண்டு இருந்ததால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சுங்க சாவடியை அடித்து நொறுக்கிய காட்சி அங்குள்ள சி.சி.டி.வியில் பதிவாகி இருந்தது. இந்த தாக்குதல் தொடர்பாக 12 பேரை போலீசார் கைது செயது உள்ளனர்.

இதே போல குஜராத் மாநிலம் சூரத்தில் ராஜ்புத்தர வம்சத்தை சேர்ந்தவர்கள் ‘பத்மாவத்’படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து முழு அடைப்புக்கு அழைப்பு 
விடுத்தனர். அங்கு பஸ் சேவை பெரிதும் பாதிக்கப்பட்டது. 6 மாவட்டங்களில் 100-க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் பஸ் சேவை முடங்கியது.

இதே போல அகமதாபாத், சூரத்தில் வன்முறை ஏற்பட்டது. 4 அரசு போக்குவரத்து பஸ்களை அடித்து நொறுக்கினார்கள். இதை தொடர்ந்து மாநில அரசு போலீஸ் பாதுகாப்பை அதிகரித்தது. ராஜஸ்தானிலும் இந்த படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துப் போராட்டம் நடத்தப்பட்டது.

ராஜஸ்தானில் போராட்டம் உச்சகட்டத்தை எட்டி உள்ளது. பத்மாவத் படத்தை ரிலீஸ் செய்தால், தங்கள் கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலை செய்வதாக பெண்கள், கையில் வாளுடன் மிரட்டல் விடுத்து வருகின்றனர். இதே போன்று சித்தூர்கர் பகுதியில் தீயில் குதித்து தற்கொலை செய்து கொள்வதாக 1908 பெண்கள் பதிவு செய்து வைத்துள்ளனர்.


#Padmaavat  #SanjayLeelaBhansali   #Rajputwomen   #Threaten 

மேலும் செய்திகள்