முஷ்பிகுர் ரஹீம்-யின் அபார சதத்தால் வங்காளதேச அணி முன்னிலை : 2-வது இன்னிங்சில் இலங்கை 39/2

இலங்கை அணி 29 ரன்கள் பின்தங்கியுள்ள நிலையில் கடைசி நாள் ஆட்டம் நாளை நடைபெறுகிறது.

Update: 2022-05-18 13:15 GMT
Image Courtesy : AFP

சட்டோகிராம்:

வங்காளதேசம், இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் சட்டோகிராமில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் ஆடிய இலங்கை அணி 397 ரன்னில் ஆல் அவுட்டானது. ஆல்ரவுண்டர் ஏஞ்சலோ மேத்யூஸ் இரட்டை சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 199 ரன்னில் ஆட்டமிழந்தார். 2-ம் நாள் முடிவில் வங்காளதேச அணி விக்கெட் இழப்பின்றி 76 ரன்கள் எடுத்திருந்தது.

3-வது நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. வங்காளதேச அணி தொடக்க வீரர் ஹசன் ஜாய் அரை சதமடித்து 58 ரன்னில் அவுட்டானார். அடுத்து வந்த ஹொசைன் சாண்டோ மற்றும் மோமினுல் ஹக் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ஒருபுறம் சிறப்பாக ஆடிய தமீம் இக்பால் சதமடித்து அசத்தினார். 133 ரன்கள் எடுத்த நிலையில் அவர் ரிட்டையர்டு ஹர்ட் முறையில் வெளியேறினார்.

இறுதியில், மூன்றாம் நாள் முடிவில் வங்காளதேச அணி 3 விக்கெட்டுக்கு 318 ரன்கள் எடுத்துள்ளது. முஷ்பிகுர் ரஹீம் 53 ரன்னும், லிட்டன் தாஸ் 54 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருக்க இலங்கை அணியை விட வங்காளதேச அணி 79 ரன்கள் பின்தங்கி இருந்தது.

4-வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. முஷ்பிகுர் ரஹீம் - லிட்டன் தாஸ் ஜோடி இலங்கை பந்துவீச்சாளர்களுக்கு கடும் சவால் அளித்தனர். சிறப்பாக விளையாடிய முஷ்பிகுர் ரஹீம் சதமடித்து அசத்தினார். லிட்டன் தாஸ் 88 ரன்களில் ஆட்டமிழந்து சதத்தை தவறவிட்டார்.

இறுதியில் வங்காளதேச அணி 171 வது ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 465 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக முஷ்பிகுர் ரஹீம் 105 ரன்கள் அடித்தார்.

4-வது நாள் ஆட்ட நேர முடிவில் இலங்கை அணி தங்கள் 2-வது இன்னிங்சில் 2 விக்கெட் இழப்பிற்கு 39 ரன்கள் எடுத்துள்ளது. வங்காளதேச அணியை விட இலங்கை அணி 29 ரன்கள் பின்தங்கியுள்ள நிலையில் கடைசி நாள் ஆட்டம் நாளை நடைபெறுகிறது.

மேலும் செய்திகள்