விஜய் ஹசாரே கோப்பை: சதம் விளாசிய ரோகித் சர்மா...மும்பை வெற்றி
மும்பை - சிக்கிம் அணிகள் மோதின;
மும்பை,
33-வது விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர் இன்று (புதன்கிழமை) முதல் ஜனவரி 18-ந் தேதி வரை ஆமதாபாத், ராஜ்கோட், ஜெய்ப்பூர், பெங்களூரு ஆகிய 4 நகரங்களில் நடக்கிறது..
இதில் இன்று நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் மும்பை - சிக்கிம் அணிகள் மோதின. இதில் மும்பை அணிக்காக இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரோகித் சர்மா விளையாடினார்.
இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற சிக்கிம் அணியின் கேப்டன் லீ யங் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி முதலில் களமிறங்கிய சிக்கிம் அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 236 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அஷிஸ் தபா 79 ரன்கள் எடுத்தார்.
தொடர்ந்து களமிறங்கிய மும்பை அணியில் ரோகித் சர்மா அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தார், பந்துகளை பவுண்டரி, சிக்சருக்கு பறக்க விட்ட ரோகித் சர்மா சதமடித்து அசத்தினார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய அவர் 94 பந்துகளில் 155 ரன்கள் எடுத்தார்.
இறுதியில் 30.3 ஓவர்களில் மும்பை 2 விக்கெட் இழப்பிற்கு 237 ரன்கள் எடுத்தது. இதனால் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்றது.