விவசாயிகள் மீதான தாக்குதலை கண்டித்து நெடுவாசலில் ஊர்வலமாக சென்று பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கதிராமங்கலத்தில் விவசாயிகள் மீதான தாக்குதலை கண்டித்து நெடுவாசலில் பொதுமக்கள் ஊர்வலமாக சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update:2017-07-03 04:15 IST
வடகாடு,

புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு அருகே உள்ள நெடுவாசல் உள்பட நாடு முழுவதும் 31 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதை கண்டித்து, நெடுவாசலில் அப்பகுதி மக்கள் கடந்த மாதம் 12-ம் தேதி 2-ம் கட்டமாக போராட்டத்தை தொடங்கினர். அதில், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான நூதன போராட்டங்கள் நடத்தி மத்திய, மாநில அரசுகளுக்கு தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில் நெடுவாசல் நாடியம்மன் கோவில் அருகே நேற்று 82-வது நாள் போராட்டம் நடைபெற்றது.


இந்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திக்கொண்டு, திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும், மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் பல்வேறு கோஷங்களை எழுப்பினார்கள். மேலும் கதிராமங்கலத்தில் போராடிய விவசாயிகள் மீது தாக்குதல் நடத்திய போலீசாரை கண்டித்தும், கதிராமங்கலத்தில் இருந்து ஓ.என்.ஜி.சி நிறுவனம் மற்றும் போலீசார் வெளியேற வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பியவாறு நெடுவாசல் போராட்ட களத்தில் இருந்து ஊர்வலமாக சென்று நெடுவாசல் பஸ் நிறுத்தம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்