வீடு புகுந்து பெண் வெட்டிக்கொலை கணவர்- மகளையும் தாக்கி விட்டு கும்பல் தப்பி ஓட்டம்

நாகர்கோவில் அருகே வீடு புகுந்து பெண் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். கணவர், மகளையும் வெட்டிய கும்பல் தப்பி ஓட்டம் பிடித்தது.

Update: 2019-01-31 23:15 GMT
ஆரல்வாய்மொழி,

நாகர்கோவில் அருகே தோவாளை கிருஷ்ணன்புதூர் அம்மன்கோவில் தெருவை சேர்ந்தவர் முத்து என்ற மணிகண்டன் (வயது 55). தோவாளை மார்க்கெட்டில் பூ வியாபாரியாக உள்ளார். இவருடைய மனைவி கல்யாணி (40). இவர்களுடைய மகள் ஆர்த்தி (15), தேரேகால்புதூர் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.

நேற்று இரவு 10 மணிக்கு மேல் முத்து, கல்யாணி, ஆர்த்தி ஆகிய 3 பேரும் இரவு உணவை முடித்து விட்டு தூங்குவதற்கு தயாரானார் கள். இதற்காக வீட்டு கதவை சாத்தினர். திடீரென்று முத்துவின் வீட்டுக்கதவை சிலர் தட்டினர். உடனே முத்துவின் மனைவி கல்யாணி வீட்டுக்கதவை திறந்தார். கதவு முழுமையாக திறக்கப்படவில்லை. அதற்குள் 4 பேர் கும்பல் திபு, திபுவென அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் வீட்டுக்குள் புகுந்தது.

கதவை திறந்த கல்யாணியை அந்த கும்பல் சரமாரியாக வெட்டியது. கல்யாணி ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார். கல்யாணியின் அலறல் சத்தம் கேட்டு முத்துவும், அவருடைய மகள் ஆர்த்தியும் ஓடி வந்தனர். அந்த கும்பல் அவர்களையும் சுற்றி வளைத்து வெட்டியது. அவர்கள் அலறியபடி வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தனர். அவர்களது அபயகுரல் அந்த பகுதி முழுவதும் கேட்டது. அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் என்னவோ, ஏதோ என்று ஓடி வந்தனர். அதற்குள் அந்த கும்பல் அங்கிருந்து அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் ரத்தம் சொட்ட சொட்ட தப்பி ஓடி விட்டது.

அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் வந்து பார்த்த போது கல்யாணி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்து கிடந்தார்.

தகவல் அறிந்த நாகர்கோவில் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். இதற் கிடையே படுகாயமடைந்த முத்து, ஆர்த்தியை மீட்டு தேரேகால்புதூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பின்னர் கல்யாணி உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கும்பல் வெறியாட்டத்தால் கொலை நடந்த வீடு முழுவதும் ரத்தம் ஆங்காங்கே சிதறி கிடந்தது போர்க்களம் போல் காட்சி அளித்தது. நேற்று இரவு நடந்த இந்த கொலை தோவாளை பகுதியில் பெரும் பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியது.

கொலை நடந்த தகவல் அறிந்தவுடன் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். ஆங்காங்கே வாகன சோதனை நடத்தப்பட்டது. அப்படி இருந்தும் கொலையாளிகள் யாரும் சிக்கவில்லை. இதுதொடர்பாக ஆரல்வாய்மொழி போலீசார் விசாரணையை தொடங்கினர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், கொலையாளிகள் யார்? எதற்காக இந்த கொலை நடந்தது என்ற விவரம் எதுவும் உடனடியாக தெரியவில்லை. கல்யாணி மட்டும் கொலை செய்யப்பட்டு இருப்பதால் அவரை குறி வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதா? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. முத்து குடும்பத்துக்கும், இன்னும் சிலருக்கும் சொத்து பிரச்சினை இருந்ததாக தெரிகிறது. அதனால் இந்த கொலை அரங்கேறி இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

கொலை கும்பல் கூலிப்படையை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேக்கிறார்கள். ஏனென்றால் கல்யாணி உடலில் விழுந்த வெட்டுக்காயங்கள் அனைத்தும் ஆழமாக உள்ளன என்றும், எனவே கூலிப்படையினர் தான் இந்த கொலையை செய்து இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இருந்தாலும் மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்