குன்னூர் ஏல மையத்தில், ரூ.8¼ கோடிக்கு தேயிலைத்தூள் விற்பனை

குன்னூர் ஏல மையத்தில் ரூ.8¼ கோடிக்கு தேயிலைத்தூள் விற்பனையானது.

Update: 2019-04-01 22:06 GMT
குன்னூர்,

நீலகிரியில் தேயிலை விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளது. இதனை நம்பி ஆயிரக்கணக்கான விவசாயிகளும், தொழிலாளர்களும் பிழைப்பு நடத்தி வருகின்றனர். மேலும் நீலகிரி முழுவதும் 16 கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளும், 100-க்கும் மேற்பட்ட தனியார் தேயிலை தொழிற்சாலைகளும் செயல்பட்டு வருகின்றன.

மேற்கண்ட தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் தேயிலைத்தூள், குன்னூர் ஏல மையத்தில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஏலம் தேயிலை வர்த்தகர் அமைப்பு சார்பில் ஆன்லைனில் நடைபெறுகிறது. இதில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வர்த்தகர்கள் கலந்துகொண்டு தேயிலைத்தூளை ஏலம் எடுக்கிறார்கள். இந்த ஏலத்தில் தேயிலை வர்த்தகர் அமைப்பில் உறுப்பினராக உள்ளவர்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. வாரந்தோறும் வியாழன், வெள்ளிக்கிழமைகளில் தேயிலை ஏலம் நடக்கிறது. அதன்படி 28, 29-ந் தேதிகளில் ஏலம் நடைபெற்றது.

இந்த ஏலத்துக்கு 9 லட்சத்து 80 ஆயிரம் கிலோ தேயிலைத்தூள் வந்தது. இதில் 6 லட்சத்து 66 ஆயிரம் கிலோ இலை ரகமாகவும், 3 லட்சத்து 14 ஆயிரம் கிலோ டஸ்ட் ரகமாகவும் இருந்தது. ஏலத்தில் 8 லட்சத்து 20 ஆயிரம் கிலோ தேயிலைத்தூள் விற்பனையானது. இதன் மதிப்பு ரூ.8 கோடியே 27 லட்சம். இது 85 சதவீத விற்பனை ஆகும். சி.டி.சி. தேயிலைத்தூளின் அதிகபட்ச விலை கிலோவுக்கு ரூ.261, ஆர்தோடக்ஸ் தேயிலைத்தூளின் அதிகபட்ச விலை கிலோவுக்கு ரூ.256 என ஏலம் போனது.

சராசரி விலையாக இலை ரக சாதாரண வகை கிலோவுக்கு ரூ.87 முதல் ரூ.93 வரையும், உயர் வகை கிலோவுக்கு ரூ.115 முதல் ரூ.125 வரையும் இருந்தது. டஸ்ட் ரக சாதாரண வகை கிலோவுக்கு ரூ.85 முதல் ரூ.95 வரையும், உயர் வகை ரூ.120 முதல் ரூ.132 வரையும் விற்பனையானது. இந்த ஏலத்தில் விற்பனையான அனைத்து தேயிலைத்தூள் ரகங்களுக்கும் கடந்த ஏலத்தை விட ரூ.1 விலை உயர்வு இருந்தது. குன்னூர் மையத்தில் அடுத்த ஏலம் வருகிற 4, 5-ந் தேதிகளில் நடக்கிறது. இந்த ஏலத்துக்கு 9 லட்சத்து 74 ஆயிரம் கிலோ தேயிலைத்தூள் விற்பனைக்கு வருகிறது.

மேலும் செய்திகள்