மறுகூட்டல், விடைத்தாள் நகல் கோரி நாளை முதல் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்: தேர்வுத்துறை

பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு இன்று வெளியானது.

Update: 2024-05-06 14:28 GMT

சென்னை,

தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் நடந்து முடிந்தது. இந்த தேர்வை சுமார் 7 லட்சத்து 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் எழுதினார்கள். இவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவு இன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்பட்டது.

7,60,606 மாணவ, மாணவிகள் எழுதிய பிளஸ் 2 பொதுத்தேர்வில் 7,19,196 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். எப்போதும்போலவே மாணவர்களை விட மாணவியர்களே அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதன்படி, மாணவர்கள் 92.37 சதவீதமும், மாணவிகள் 96.44 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இந்த நிலையில், +2 தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் நாளை முதல் 11ம் தேதி வரை மறுகூட்டல் மற்றும் விடைத்தாள் நகல் கோரி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என தேர்வு துறை தெரிவித்துள்ளது.

விடைத்தாள் நகல், மறுகூட்டல் கோரி விண்ணப்பிக்க விரும்பும் பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகள் வழியாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்கள் வழியாகவும் 07.05.2024 (செவ்வாய்க்கிழமை) காலை 11.00 மணி முதல் 11.05.2024 ( சனிக்கிழமை) மாலை 5.00 மணி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பொதுத் தேர்வெழுதிய பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளி தலைமையாசிரியர்கள் வழியாக மதிப்பெண் பட்டியலை 09.05.2024 முதல் பெற்றுக் கொள்ளலாம் அல்லது தங்களது பிறந்த தேதி, பதிவண் ஆகியவற்றைப் பதிவுசெய்து, www.dge.tn.nic.in இணையதளத்தில் தாங்களே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags:    

மேலும் செய்திகள்