திருவெண்ணெய்நல்லூர் அருகே, வாகனம் மோதி 2 தொழிலாளர்கள் பலி
திருவெண்ணெய்நல்லூர் அருகே வாகனம் மோதி 2 கூலித்தொழிலாளர்கள் பலியானார்கள்.
அரசூர்,
திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள ஆலங்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர்கள் ராமஜெயம் மகன் கண்ணன் (வயது 34), கண்ணன் மகன் அன்பு (34). இவர்கள் இருவரும் கூலி வேலை செய்து வந்தனர்.
நண்பர்களான இவர்கள் 2 பேரும் நேற்று முன்தினம் இரவு ஒரு மோட்டார் சைக்கிளில் மடப்பட்டில் உள்ள கடைக்கு சென்றுவிட்டு அங்கிருந்து மீண்டும் ஆலங்குப்பத்திற்கு புறப்பட்டனர்.
இவர்கள் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சித்தானங்கூர் ராகவன் வாய்க்கால் அருகே சென்றபோது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம், அவர்களது மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.
இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட கண்ணன், அன்பு ஆகிய இருவரும் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
இதுகுறித்த தகவல் அறிந்ததும் திருவெண்ணெய்நல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் பலியான இருவரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதைப்பற்றி அறிந்ததும் அவர்களது குடும்பத்தினர் அரசு மருத்துவமனைக்கு வந்து கண்ணன், அன்பு ஆகியோரின் உடலை பார்த்து கதறி அழுதனர்.