தேர்தல் விழிப்புணர்வு ஊர்வலம்

மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்கம் சார்பில் தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் துண்டு பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2019-04-11 22:30 GMT
ஜெயங்கொண்டம்,

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள தா.பழூர் அரசுமேல்நிலைப்பள்ளியின் அருகில் மாவட்ட அனைத்து மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்கம் சார்பில் தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் துண்டு பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஊர்வலத்தை மாவட்ட வழங்கல் அலுவலர் ரவிச்சந்திரன் தொடங்கி வைத்தார். ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் தேர்தலில் அனைவரும் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும். நேர்மையாக வாக்களிக்க வேண்டும். வாக்களிப்பது நம் ஜனநாயக கடமை. எங்கள் வாக்கு விற்பனைக்கு அல்ல போன்ற விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு சென்றனர். அப்போது கடைவீதியில் நின்று கொண்டிருந்த பொதுமக்களிடம் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கி அனைவரும் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். இதில் மண்டல துணை வட்டாட்சியர் மீனா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜாகீர்உசேன், பஞ்சாபிகேசன் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சங்க தலைவர் பழனியாண்டி, செயலாளர் அன்பழகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்