சென்னை டி.பி.சத்திரத்தில் பரபரப்பு தி.மு.க. பகுதி செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டுவீச்சு மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேருக்கு வலைவீச்சு

சென்னை டி.பி. சத்திரத்தில் வசிக்கும் தி.மு.க. பகுதி செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதில் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த கார் சேதமடைந்தது. இந்த சம்பவம் தொடர்பாக மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

Update: 2019-04-12 23:15 GMT
சென்னை,

சென்னை அண்ணாநகர் வடக்கு தி.மு.க. பகுதி செயலாளராக இருப்பவர் பரமசிவம். இவர் சென்னை டி.பி.சத்திரம் தர்மராஜா கோவில் தெருவில் குடும்பத்துடன் வசிக்கிறார். மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் தயாநிதி மாறனை ஆதரித்து இவர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

நேற்று முன்தினம் இரவு பிரசாரத்தை முடித்துவிட்டு வீட்டில் படுத்து தூங்கிவிட்டார். நேற்று காலை 6.30 மணிஅளவில் அவரது வீட்டின் முன்பு குண்டு வெடித்தது போன்ற பயங்கர சத்தம் கேட்டது. வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த அவரது சொகுசு காரின் என்ஜின் பகுதி தீப்பிடித்து எரிந்தது.

சத்தம் கேட்டு தூங்கிக்கொண்டிருந்த பரமசிவம் வெளியே ஓடிவந்தார். எரிந்து கொண்டிருந்த கார்மீது தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தார். அந்த பகுதி முழுவதும் பரபரப்புடன் காணப்பட்டது. அந்த பகுதியில் பொதுமக்களும், தி.மு.க. தொண்டர்களும் ஏராளமான பேர் கூடிவிட்டனர்.

பரமசிவத்தின் வீட்டின் மீது 3 பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டது தெரிய வந்தது. அது காரின் என்ஜின் மீது பட்ட ஒரு குண்டு மட்டும் வெடித்து தீப்பற்றிக்கொண்டது தெரிய வந்தது. பிளாஸ்டிக் பைகளில் பெட்ரோலை நிரப்பி திரியுடன் சேர்த்து நூலால் கட்டி பெட்ரோல் குண்டை தயாரித்து இருந்தனர்.

இதுபற்றி டி.பி.சத்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. கீழ்ப்பாக்கம் துணை கமிஷனர் ராஜேந்திரன், உதவி கமிஷனர் ஜெகதீஷ்வரன் ஆகியோர் போலீஸ் படையுடன் விரைந்து சென்று பரமசிவத்தின் வீட்டில் விசாரணை நடத்தினார்கள்.

தடய அறிவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் பெட்ரோல் குண்டு வெடித்த பகுதியையும், காரையும் ஆய்வு செய்தனர். மத்திய சென்னை தொகுதி தி.மு.க. வேட்பாளர் தயாநிதி மாறனும் பெட்ரோல் குண்டு வெடித்த பரமசிவத்தின் வீட்டிற்கு சென்று பார்வையிட்டார். பின்னர் அவர் பரமசிவத்திடம் நடந்த சம்பவம் பற்றி கேட்டறிந்தார்.

பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

பரமசிவத்தின் வீட்டில் நடந்த பெட்ரோல் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக டி.பி.சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். வியாழக்கிழமை (நேற்று முன்தினம்) அன்று இரவு அமைந்தகரை பகுதியில் வாக்கு சேகரிப்பு நடந்தபோது, அ.ம.மு.க., எஸ்.டி.பி.ஐ. கட்சியை சேர்ந்தவர்களுக்கும், தி.மு.க.வினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பாக இருதரப்பினரும் கொடுத்த புகாரின்பேரில் அமைந்தகரை போலீசார் சி.எஸ்.ஆர். ரசீது கொடுத்து விசாரித்து வருகிறார்கள். அந்த சம்பவத்தின் எதிரொலியாக இந்த பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவம் நடந்ததா? என்று விசாரித்து வருகிறோம்.

3 மோட்டார் சைக்கிள்களில் தலையில் ஹெல்மெட் அணிந்து வந்த 6 பேர் பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். அவர்களது உருவம் அந்தபகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியுள்ளது. அதை அடிப்படையாக வைத்து விசாரணை நடக்கிறது. குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள். அவர்களை வலைவீசிப்பிடிக்க 3 இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்