ஆம்பூர் பஜார் பகுதியில் மு.க.ஸ்டாலின் நடந்து சென்று ஆதரவு திரட்டினார் அம்பேத்கர் சிலைக்கும் மாலை அணிவித்தார்

ஆம்பூர் பஜார் பகுதியில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நடந்து சென்று வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார். முன்னதாக அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தார்.

Update: 2019-04-14 23:00 GMT
ஆம்பூர், 

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். வேலூர் மாவட்டத்தில் முதல்கட்ட பிரசாரத்தை முடித்த மு.க.ஸ்டாலின், நேற்று 2-வது கட்டமாக தனது பிரசாரத்தை ஆம்பூரில் தொடங்கினார்.

முன்னதாக அவர் நேற்று முன்தினம் இரவு ஆம்பூரில் உள்ள ஒரு தனியார் நிறுவன விருந்தினர் மாளிகையில் தங்கினார். இதனையடுத்து நேற்று காலை 8.45 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு ஆம்பூர் பஸ் நிலையத்திற்கு வந்தார். அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு கே.எம்.சாமி திடலில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அதைத் தொடர்ந்து ஆம்பூர் பஜார் பகுதிக்கு சென்ற அவர் பழக்கடை பஜார், காய்கறி மார்க்கெட் ஆகிய பகுதிகளில் நடந்து சென்று கடைக்காரர்கள், பொதுமக்களிடம் ஆதரவு திரட்டினார். மு.க.ஸ்டாலின் வருகை யாருக்கும் தெரியாமல் ரகசியமாக வைக்கப்பட்டு இருந்தது. திடீரென பஜாரில் உள்ள கடைக்கு வந்து ஸ்டாலின் ஆதரவு திரட்டியதால் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் ஆச்சரியத்துடன் ஸ்டாலினுக்கு கைகொடுத்து மகிழ்ந்தனர். பாங்கி மார்க்கெட்டில் அமைந்துள்ள பெரும்பாலான கடை வியாபாரிகளிடம் கைகொடுத்து ஆதரவு திரட்டினார்.

அப்போது தி.மு.க. பொருளாளர் துரைமுருகன், வேலூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் கதிர்ஆனந்த், ஆம்பூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர் அ.செ.வில்வநாதன், மாவட்ட செயலாளர் நந்தகுமார் எம்.எல்.ஏ., மாவட்ட பொறுப்பாளர் முத்தமிழ்செல்வி, தேர்தல் பொறுப்பாளர் டாக்டர் மஸ்தான், ஆம்பூர் நகர செயலாளர் எம்.ஆர்.ஆறுமுகம், மாதனூர் ஒன்றிய செயலாளர் சுரேஷ்குமார் உள்ளிட்ட ஏராளமான தி.மு.க.வினர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்