ஈரோட்டில் பயங்கரம் தந்தை அடித்து கொலை; மகன் கைது

ஈரோட்டில் தந்தையை அடித்து கொன்ற மகனை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-04-16 23:30 GMT

ஈரோடு,

ஈரோடு நாராயணவலசு வாய்க்கால்மேடு இந்திராநகரை சேர்ந்தவர் ராமசாமி (வயது 70). தொழிலாளி. இவருடைய மனைவி வெண்ணிலா. இவர் கடந்த 3 ஆண்டுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களுக்கு நாராயணமூர்த்தி (39) என்ற மகனும், தங்கமணி (36) என்ற மகளும் உள்ளனர். இதில் தங்கமணி திருமணமாகி தனது கணவருடன் வசித்து வருகிறார். நாராயணமூர்த்திக்கு திருமணமாகவில்லை.

ராமசாமிக்கு சொந்தமான வீட்டை தனது பெயரில் எழுதி கொடுக்கும்படி நாராயணமூர்த்தி கேட்டு வந்தார். இதனால் தந்தை–மகனுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ராமசாமிக்கும், நாராயணமூர்த்திக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது, ராமசாமி தனது வீட்டை மகள் தங்கமணியின் பெயரில் எழுதி வைக்க போவதாக தெரிவித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த நாராயணமூர்த்தி வீட்டில் இருந்த இரும்பு ஊதுகுழல் மற்றும் கட்டையால் ராமசாமியை தாக்கினார். இதில் ரத்தவெள்ளத்தில் ராமசாமி கீழே சரிந்து விழுந்தார்.

இதைப்பார்த்ததும், அக்கம் பக்கத்தினர் ராமசாமியை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி இரவு 10.45 மணிஅளவில் ராமசாமி பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தந்தையை அடித்து கொன்றதாக நாராயணமூர்த்தியை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்