பண்ருட்டியில், ரத்தக்காயங்களுடன் வியாபாரி பிணம் கொலையா? போலீசார் விசாரணை

பண்ருட்டியில் ரத்தக்காயங்களுடன் வியாபாரி பிணமாக கிடந்தார். அவரை யாரேனும் கொலை செய்தார்களா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2019-04-17 22:15 GMT
பண்ருட்டி,

பண்ருட்டி பஸ் நிலையம் அருகில் உள்ள இந்திராகாந்தி சாலையில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் தலையில் ரத்தக்காயங்களுடன் பிணமாக கிடந்தார். இதைபார்த்த அந்த வழியாக சென்ற பொதுமக்கள் இதுபற்றி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இறந்து கிடந்தவரின் உடலை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

விசாரணையில் இறந்தவர் பண்ருட்டி அருகே உள்ள பத்தரக்கோட்டையை சேர்ந்த மணிலா வியாபாரி கலியபெருமாள்(வயது 50) என்பது தெரியவந்தது. ஆனால் அவர் எவ்வாறு இறந்தார் என்பது பற்றி தெரியவில்லை. இதையடுத்து கலியபெருமாளின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை யாரேனும் அடித்து கொலை செய்தார்களா? அல்லது அந்த வழியாக சென்ற வாகனத்தில் அடிபட்டு இறந்தாரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்