200-க்கு 212 மதிப்பெண் எடுத்த குஜராத் பள்ளி மாணவி.. வைரலாகும் மார்க் ஷீட்!

குஜராத் பள்ளி மாணவி 200க்கு 212 மதிப்பெண் எடுத்த மார்க் ஷீட் சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

Update: 2024-05-07 10:01 GMT

காந்திநகர்,

குஜராத் மாநிலம் தாஹோத் மாவட்டத்தில் கராசனா கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் மாணவர்களின் தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. இதில் 4-ம் வகுப்பு படித்து வரும் மாணவி மனிஷாபாய் வம்சிபிள் என்ற மாணவி எழுதிய தேர்வுகளில் குஜராத்தி மற்றும் கணித பாடங்களில் தேர்வு மதிப்பெண் அதிகபட்சமாக 200-க்கு 211 மற்றும் 212 பெற்றதாக முடிவுகள் வழங்கப்பட்டது.

இதனை பார்த்து ஆச்சரியம் அடைந்த மாணவி தனது மதிப்பெண் சான்றிதழை தனது வீட்டிற்கு கொண்டு சென்று பெற்றோரிடம் காட்டினார். இதைப்பார்த்து அவரது பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். அவர்கள் தங்கள் மகளுக்கு வழங்கப்பட்ட விவரங்களை புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர்.

அந்த புகைப்படங்கள் வைரலாக பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனைதொடர்ந்து கல்வித்துறை அதிகாரிகள் உடனடியாக விசாரணைக்கு உத்தரவிட்டனர். அப்போது கணக்கீட்டில் ஏற்பட்ட சிறு தவறு காரணமாக இந்த குழப்பம் ஏற்பட்டுள்ளதாக பள்ளி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து மாணவியின் மதிப்பெண் விபரங்கள் சரி செய்யப்பட்டன. அதன்படி மாணவி குஜராத்தி பாடத்தில் 200-க்கு 191 மதிப்பெண்களும், கணிதத்தில் 200-க்கு 190 மதிப்பெண்களும் பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்