வாக்குப்பதிவின்போது மயங்கி விழுந்தனர் அரிமளத்தை சேர்ந்த மூதாட்டி உள்பட 6 பேர் சாவு

வாக்குப்பதிவின்போது மயங்கி விழுந்ததில் அரிமளத்தை சேர்ந்த மூதாட்டி உள்பட 6 பேர் உயிரிழந்தனர்.

Update: 2019-04-18 23:15 GMT
அரிமளம்,

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற்றது. ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியில் உள்ள குருங்களூர் கிராமத்தில் 174-வது எண் வாக்குச்சாவடியில் காலை முதல் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர்.

இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த வீரப்பன் மனைவி மல்லிகா(வயது 60) வாக்களிப்பதற்காக வரிசையில் நின்று கொண்டிருந்த போது மயங்கி கீழே விழுந்தார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஏம்பல் ளஅரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து ஏம்பல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம், சிவகிரியில் உள்ள மசூதி தெருவை சேர்ந்தவர் முருகேசன்(66). இவர், சிவகிரி கொடுமுடி ரோட்டில் டீக்கடை வைத்து நடத்தி வந்தார். வாக்களிக்க வந்த இவர் வரிசையில் நிற்பதற்காக படி ஏறியபோது மயங்கி விழுந்தார். சிவகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்ட அவரை, டாக்டர்கள் பரிசோதித்தபோது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள பெரியேரிப்பட்டி ஊராட்சி வேடப்பட்டி பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன் (76). அ.தி.மு.க. தொண்டர். இவர் வேடப்பட்டி அங்கன்வாடி மையத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் ஓட்டுபோட்டு விட்டு வெளியே வந்த போது மயங்கி விழுந்து இறந்தார்.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே துரைசாமிபுரம்புதூரை சேர்ந்தவர் முத்துப்பிள்ளை(90). இவர், அந்த கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் ஓட்டு போட்டுவிட்டு வெளியே வந்த போது மயங்கி விழுந்தார். அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்ட அவரை, டாக்டர்கள் பரிசோதித்து விட்டு அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

சேலம் அன்னதானப்பட்டி சண்முகாநகரை சேர்ந்தவர் சந்திரபோஸ்(68), ஓய்வு பெற்ற ஆசிரியர். இவர் தனது மகன் தமிழ்வாணனுடன் ஓட்டு போடுவதற்காக பிற்பகல் 3.30 மணியளவில் லைன்மேடு பகுதியில் உள்ள குகை ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடி மையத்திற்கு மோட்டார் சைக்கிளில் வந்தார். அப்போது அவர், திடீரென மயங்கி கீழே விழுந்தார். அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவரை, டாக்டர்கள் பரிசோதித்து விட்டு இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

வேலூர் மாவட்டம் வாலாஜாவை அடுத்த அனந்தலை குளத்து தெருவை சேர்ந்த கண்ணன் மனைவி துளசி (80). இவர் அனந்தலை கிராமத்தில் பண்டித மாளவியா நடு நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடி மையத்தில் ஓட்டு போடுவதற்காக வந்தார். சிறிதுநேரம் அங்கு அமர்ந்திருந்த துளசி திடீரென மயக்கமடைந்து உயிரிழந்தார். உயிரிழந்த துளசி உடலுக்கு ராணிப்பேட்டை உதவி கலெக்டர் இளம்பகவத் அஞ்சலி செலுத்தினார்.

மேலும் செய்திகள்