அருமனை அருகே கார் மோதி பால் வியாபாரி பலி

அருமனை அருகே கார் மோதி பால் வியாபாரி பலியானார்.

Update: 2019-04-30 23:00 GMT
அருமனை,


அருமனை அருகே பனச்சவிளை பகுதியை சேர்ந்தவர் மோகனன்(வயது 60). இவர் பிரபல நிறுவனத்தின் பால் பாக்கெட்டுகளை அருமனை சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கடை மற்றும் வீடுகளுக்கு விற்பனை செய்து வருகிறார்.

 மோகனன் தனக்கு சொந்தமான மினிடெம்போவில் பால்களை வினியோகம் செய்வது வழக்கம்.


நேற்றுமுன்தினம் மதியம் மேல்புறத்தில் இருந்து அருமனை நோக்கி பால் வினியோகத்தில் ஈடுபட்டிருந்தார். அருமனை முழுக்கோடு பகுதியில் உள்ள ஒரு கடைக்கு பால் வினியோகம் செய்தார். பின்னர், தனது வாகனத்தின் பின்பகுதிக்கு வந்து கதவை பூட்டிக்கொண்டிருந்தார்.

அப்போது, மேல்புறத்தில் இருந்து அருமனை வேகமாக வந்த கார், மோகனின் பின்னால் மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

பின்னர், இதுகுறித்து அருமனை போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் காரை ஓட்டி வந்த குழித்துறை கல்லுகட்டி பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்