திருமானூர் அருகே தொழிலாளியை கொலை செய்த அண்ணனுக்கு போலீசார் வலைவீச்சு

திருமானூர் அருகே தொழிலாளியை கொலை செய்த அண்ணனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2019-04-30 23:15 GMT
கீழப்பழுவூர்,

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கோவிலூர் கிராமத்தை சேர்ந்தவர் தங்கராசு. இவரது மகன்கள் ராஜேந்திரன்(வயது 50), ரவி(48). இருவரும் கூலி தொழிலாளர்கள். இருவருக்கும் திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகளுடன் அருகருகே உள்ள வீடுகளில் வசித்து வருகின்றனர். இரு வீட்டிற்கும் இடையே உள்ள சந்து பகுதியில் வேலி அமைக்கப்பட்டுள்ளது. இதனால் இரு குடும்பத்தினருக்கும் இடையே நிலத்தகராறு காரணமாக கடந்த சில ஆண்டுகளாகவே வாய்த்தகராறு அவ்வப்போது ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது. ரவி தனது வீட்டை சுற்றி தென்னை மரங்களை வளர்த்து வந்தார். அந்த மரத்தின் மட்டைகள் ராஜேந்திரனின் வீட்டில் உரசுவதால் இரு குடும்பத்து பெண்களுக்கிடையே நேற்று முன்தினம் இரவு வாய்த்தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த ராஜேந்திரனின் மனைவி ராஜேந்திரனுக்கு போன் செய்து அழைத்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து கேரளாவில் கூலி வேலை பார்த்து வந்த ராஜேந்திரன் புறப்பட்டு நேற்று காலை சொந்த ஊரான கோவிலூருக்கு வந்தார். அதன்பின் நேற்று காலை ராஜேந்திரனுக்கும், ரவிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ராஜேந்திரன் அரிவாளால் ரவியை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடிவிட்டார். இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். இது குறித்து திருமானூர் போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து தலைமறைவான ராஜேந்திரனை தேடி வருகின்றனர். இச்சம்பவத்தால் அப் பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

மேலும் செய்திகள்