உ.பி.யில் 3-வது கட்ட தேர்தலில் பா.ஜனதா துடைத்து எறியப்படும் - அகிலேஷ் யாதவ்

உத்தரபிரதேசத்தில் நடைபெறும் 3-வது கட்ட தேர்தலில் பா.ஜனதாவை மக்கள் 7 மைல்களுக்கு அப்பால் தூக்கி வீசுவர் என்று அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

Update: 2024-05-05 04:57 GMT

கோப்புப்படம்

லக்னோ,

உத்தரபிரதேசத்தின் படானில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட சமாஜ்வாடி கட்சி  தலைவர் அகிலேஷ் யாதவ், மாநிலத்தில் நடைபெறும் 3-வது கட்ட தேர்தலில் பா.ஜனதா துடைத்து எறியப்படும் என கூறினார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், 'மே 7-ந்தேதி நடைபெறும் 3-வது கட்ட தேர்தலில் பா.ஜனதாவை மக்கள் 7 மைல்களுக்கு அப்பால் தூக்கி வீசுவர். இந்த தேர்தலில் அவர்கள் முழுமையாக துடைத்து எறியப்படுவர். முதல் இரண்டு கட்டங்களில் பா.ஜனதாவை மக்கள் கவிழ்த்தனர். மூன்றாவது கட்டத்தில் இவர்களை துடைத்தெறியப் போகிறார்கள்' என தெரிவித்தார்.

மேலும் அவர், 'விவசாயிகள் வருமானம் இரட்டிப்பாக்கப்படும் என அவர்கள் (பா.ஜனதா) வாக்குறுதி அளித்தனர். ஆனால் இன்று விவசாயிகள் தங்கள் வருவாயை கணக்கிட்டால், கவலையே மிஞ்சும். ஏனெனில் விலைவாசி உயர்வால் உற்பத்திக்கு தகுந்த வருவாயை ஈட்ட முடியவில்லை. அவர்களது உற்பத்திக்கான செலவை அரசும் வழங்கவில்லை' என குற்றம் சாட்டினார்.

இவ்வாறு அனைத்து பிரிவினருக்கும் பா.ஜனதா போலி வாக்குறுதி அளித்திருப்பதாக கூறிய அகிலேஷ் யாதவ், கடந்த 10 ஆண்டுகளாக அவர்கள் வழங்கிய வாக்குறுதிகள் அனைத்தும் பொய்யாகவே மாறியிருப்பதாகவும் கூறினார். இதனால் மக்கள் பா.ஜனதாவை தூக்கி வீசுவது உறுதி என்றும் அவர் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்