சிதம்பரம் அருகே, மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதல் - என்ஜினீயரிங் மாணவர் பலி

சிதம்பரம் அருகே மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதிய விபத்தில் என்ஜினீயரிங் மாணவர் பலியானார்.

Update: 2019-05-02 22:45 GMT
சிதம்பரம்,

சிதம்பரம் தாலுகா ஜெயங்கொண்டபட்டினம் பூக்காரத்தெருவை சேர்ந்தவர் மனோகரன். இவருடைய மகன் விக்னேஷ்(வயது 21). இவர் காட்டுமன்னார்கோவில் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு என்ஜினீயரிங் படித்து வந்தார். சம்பவத்தன்று இவர் சீர்காழி அருகே உள்ள திருமயிலடி கிராமத்தை சேர்ந்த நண்பர் கணேசன் என்பவருடன், ஒரு மோட்டார் சைக்கிளில் சிதம்பரம் நோக்கி வந்து கொண்டிருந்தார். மோட்டார் சைக்கிளை விக்னேஷ் ஓட்டினார். சிதம்பரம் அடுத்த கடவாச்சேரி என்ற இடத்தில் வந்து கொண்டிருந்த போது சீர்காழியில் இருந்து சிதம்பரம் நோக்கி வந்த பஸ் ஒன்று இவர்களது மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது.

இதில் விக்னேஷ் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். பலத்த காயமடைந்த கணேசனை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதற்கிடையே இதுபற்றி அறிந்த அண்ணாமலை நகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்தில் பலியான விக்னேசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்