உலக வர்த்தக மைய 30-வது மாடியில் இருந்து குதித்து ஜி.எஸ்.டி. சூப்பிரண்டு தற்கொலை

உலக வர்த்தக மையத்தின் 30-வது மாடியில் இருந்து குதித்து ஜி.எஸ்.டி. சூப்பிரண்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2019-05-14 22:21 GMT
மும்பை,

மும்பை கப்பரடே பகுதியில் உலக வர்த்தக மைய கட்டிடம் உள்ளது. நேற்று முன்தினம் மாலை 6.30 மணியளவில் இந்த கட்டிடத்தின் 30-வது மாடியில் இருந்து ஒருவர் திடீரென கீழே குதித்தார். இதில் படுகாயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதை பார்த்து அங்கிருந்தவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

சிறிது நேரத்தில் அங்கு எராளமானவர்கள் திரண்டு விட்டனர். இதன் காரணமாக உலக வர்த்தக மைய கட்டிட வளாகத்தில் பரபரப்பு உண்டானது. இதுபற்றி உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

ஜி.எஸ்.டி. சூப்பிரண்டு

தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ரத்த வெள்ளத்தில் கிடந்தவரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதையடுத்து போலீசார் அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், தற்கொலை செய்து கொண்டவரின் பெயர் ஹரிந்தர் கபாடியா (வயது51) என்பதும், அவர் ஜி.எஸ்.டி. சூப்பிரண்டாக பணிபுரிந்து வந்ததும் தெரியவந்தது.

நோயால் பாதிக்கப்பட்டவர்

சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தினார்கள். இதில், அவர் மூளை பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு 7 மாதங்கள் வரை விடுமுறையில் இருந்தது தெரியவந்தது. சிகிச்சையை தொடர்ந்து 3 மாதத்துக்கு முன்னர் தான் அவர் பணிக்கு திரும்பி இருக்கிறார்.

இருப்பினும் உடல் நலக்குறைவு சரியாகாததன் காரணமாக மனஅழுத்தத்தில் இருந்து வந்த அவர், இந்த விபரீத முடிவை தேடிக் கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்