சத்தியமங்கலம் அருகே பயங்கரம்; கத்தியால் குத்தி பெண் கொலை

சத்தியமங்கலம் அருகே கத்தியால் குத்தி பெண் கொலை செய்யப்பட்டார்.

Update: 2019-05-17 22:15 GMT

சத்தியமங்கலம்,

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள சிக்கரசம்பாளையத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 33). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி லட்சுமி (30). இவர் சத்தியமங்கலத்தில் அத்தாணி ரோட்டில் உள்ள ஒரு பனியன் கம்பெனியில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவர்களுக்கு ஜெரீன் (8) என்ற மகனும், ஜெசிகா (6) என்ற மகளும் உள்ளனர்.

இந்தநிலையில் பனியன் கம்பெனிக்கு லட்சுமி நேற்று காலை வேலைக்கு சென்றார். பின்னர் வேலை முடிந்ததும் இரவு வீட்டுக்கு திரும்பினார்.

இதற்காக சத்தியமங்கலத்தில் இருந்து பஸ் ஏறி சிக்கரசம்பாளையம் வந்தார். சிக்கரசம்பாளையம் பஸ் நிறுத்தத்தில் இருந்து வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். சிறிது தூரத்தில் இருள் நிறைந்த இடத்தில் சென்றபோது அங்கு வந்த மர்ம நபர் திடீரென கத்தியால் லட்சுமியின் கழுத்தில் குத்திவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார். இதில் ரத்த வெள்ளத்தில் லட்சுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் சத்தியமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று லட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து லட்சுமியை கொலை செய்தது யார்? கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்