குழந்தையில்லாததால் ஆத்திரம் மனைவியை கொலை செய்து நாடகமாடிய கணவர் கைது

அண்டாப்ஹில் பகுதியில், குழந்தையில்லாததால் ஆத்திரத்தில்மனைவியை கொலை செய்து நாடகமாடிய கணவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2019-05-20 00:02 GMT
மும்பை,

மும்பை அண்டாப்ஹில், ரவாலி கேம்ப் பகுதியை சேர்ந்தவர் நரேஷ்(வயது34). இவரது மனைவி சுப்ரியா (34). இவர்களுக்கு குழந்தை இல்லை. இந்தநிலையில், ஏப்ரல் மாதம் 7-ந் தேதி சுப்ரியா வீட்டில் பிணமாக மீட்கப்பட்டார்.

தகவல் அறிந்து வந்த போலீசார் சுப்ரியாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், அவரது கணவர் மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது.

இதையடுத்து போலீசார் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து நரேசிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் குடும்ப தகராறில் மனைவி சுப்ரியா தூக்குப்போட்டு தற்கொலை செய்ததாக கூறினார்.

இந்தநிலையில், பிரேத பரிசோதனை அறிக்கையில் சுப்ரியா கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் நரேசிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.

அதில், திருமணம் முடிந்து நீண்ட காலம் ஆகியும் குழந்தை இல்லாததால் ஆத்திரம் அடைந்த நரேஷ், தனது மனைவி சுப்ரியாவை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு தற்கொலை நாடகமாடியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் நரேசை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்