கண்டமனூர் அருகே, கிணற்றில் தவறி விழுந்து பள்ளி மாணவன் பலி

கண்டமனூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து பள்ளி மாணவன் பரிதாபமாக இறந்தான்.

Update: 2019-05-20 22:30 GMT
கண்டமனூர்,

கண்டமனூர் அருகே உள்ள சங்ககோணாம்பட்டியை சேர்ந்தவர் அலெக்ஸ்பாண்டியன் (வயது 33). கூலி வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி சகுந்தலா (32). இவர்களது மகன் ஆகாஷ் (12) சங்ககோணாம்பட்டியில் உள்ள தொடக்கப்பள்ளியில் 4-ம் வகுப்பு படித்துவிட்டு விடுமுறையில் இருந்தான்.

இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஆகாஷ் கோடை விடுமுறைக்காக கணேசபுரத்தில் உள்ள தனது தாத்தா மணிகண்டன் வீட்டிற்கு வந்துள்ளான். நேற்றுமுன்தினம் ஆகாஷ் நண்பர் களுடன் அருகில் உள்ள தோட்டத்தின் தொட்டியில் குளித்து கொண்டிருந்தான். பின்னர் ஆகாஷ் அருகில் இருந்த ஆழமான கிணற்றை எட்டி பார்த்துள்ளான்.

இந்த சமயத்தில் அவன் எதிர்பாராதவிதமாக கிணற்றில் தவறி விழுந்து விட்டான். இதையடுத்து உடன் இருந்த நண்பர்கள் கூச்சல் போட்டனர். அதையொட்டி அருகில் இருந்த கிராம மக்கள் ஓடிவந்து கிணற்றில் இறங்கி தண்ணீரில் மூழ்கி இறந்த ஆகாஷ் உடலை மீட்டு மேலே கொண்டு வந்தனர். இதுகுறித்து கண்டமனூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஆகாஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் ஆகாஷ் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது. 

மேலும் செய்திகள்