வத்தலக்குண்டு அருகே பரிதாபம், புளியமரத்தில் ஸ்கூட்டர் மோதி இளம்பெண் உள்பட 2 பேர் சாவு

வத்தலக்குண்டு அருகே புளியமரத்தில் ஸ்கூட்டர் மோதி இளம்பெண் உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.

Update: 2019-05-21 22:15 GMT
வத்தலக்குண்டு,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கொக்குளத்தை சேர்ந்தவர் ஜெயராமன் (வயது 27). பெயிண்டர். இவர், கடந்த 19-ந் தேதி சோழவந்தானை சேர்ந்த உறவினரான ராமலட்சுமி (21) என்பவருடன் ஸ்கூட்டரில் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி வைகை அணைக்கு சுற்றுலா சென்றார்.

பின்னர் அவர்கள் 2 பேரும் ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். ஸ்கூட்டரை ராமலட்சுமி ஓட்டினார். பின்னால் ஜெயராமன் அமர்ந்திருந்தார். வத்தலக்குண்டு எல்.ஐ.சி. அலுவலகம் அருகே வந்தபோது திடீரென ஸ்கூட்டர் நிலைதடுமாறி சாலையோரத்தில் உள்ள புளியமரத்தில் மோதியது. இதில் ஸ்கூட்டர் சுக்குநூறாக நொறுங்கியது.

கண்இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்டதில் 2 பேரும் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர். அப்போது அந்த வழியாக வந்தவர்கள் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக் காக வத்தலக்குண்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர்கள் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி 2 பேரும் நேற்று பரிதாபமாக இறந்தனர். இந்த விபத்து குறித்து வத்தலக்குண்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் இறந்த ராமலட்சுமிக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்