ராமநாதபுரத்தில் பரபரப்பு: ஆயுதப்படை குடியிருப்பில் போலீஸ்காரர் தற்கொலை

ராமநாதபுரம் ஆயுதப்படை குடியிருப்பில் போலீஸ்காரர் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Update: 2019-07-31 23:45 GMT
ராமநாதபுரம்,

மதுரை தத்தனேரி அருள்தாஸ்புரம் திரு.வி.க. தெருவை சேர்ந்தவர் முனீஸ்வரன். அவருடைய மகன் நாகராஜன் (வயது 35). இவருக்கு கடந்த 2016-ம் ஆண்டு திருமணமாகி விஜயலட்சுமி என்ற மனைவியும், 2 வயதில் மகனும் உள்ளனர்.

நாகராஜன் கடந்த 2011-ல் தமிழக காவல் துறையில் பணியில் சேர்ந்தார். 2016-ல் ராமநாதபுரம் ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

கடந்த ஜனவரி மாதம் 18-ந்தேதி முதல் விடுப்பில் சென்ற இவர் மீண்டும் பணிக்கு திரும்பவில்லை. இதனிடையே நாகராஜனின் மனைவி குடும்ப பிரச்சினையால் அவரைவிட்டு பிரிந்து தனது குழந்தையுடன் பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டாராம்.

சமீபகாலமாக ராமநாதபுரம் ஆயுதப்படை குடியிருப்பில் நாகராஜன் தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று பிற்பகலில் நாகராஜன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்ததும் கேணிக்கரை போலீசார் அங்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். போலீஸ்காரர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்