திருமானூர் அருகே அண்ணனை கத்தரிக்கோலால் குத்திக்கொன்ற வாலிபர் கைது

திருமானூர் அருகே அண்ணனை கத்தரிக்கோலால் குத்திக்கொன்ற வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2019-08-13 22:15 GMT
கீழப்பழுவூர்,

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட திருவெங்கனூர் கிராமத்தை சேர்ந்தவர் உத்திராபதி. இவரது மகன்கள் சுபாஷ்(வயது 28), சுரேஷ்(26), தினேஷ்(22). கடந்த ஆண்டு உத்திராபதி உடல்நலக் குறைவால் இறந்துவிட்டார். இந்நிலையில் சுபாசும், சுரேசும் இணைந்து மாத தவணையில் பணம் செலுத்தும் வகையில் லாரி ஒன்றை புதிதாக வாங்கி ஓட்டி வந்தனர். இதில் சுபாஷ் அவ்வப்போது குடித்துவிட்டு வேலைக்கு சரியாக செல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் வாகனத்திற்கு வாங்கிய கடனை சரியாக செலுத்த முடியாததால் சுபாசை, சுரேஷ் அவ்வப்போது கண்டித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு இது தொடர்பாக சுபாசுக்கும், சுரேசுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

குத்திக்கொலை

சிறிது நேரத்தில் வாக்குவாதம் முற்றவே, இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இதில் ஆத்திரமடைந்த சுரேஷ் அருகிலிருந்த கத்தரிக்கோலை எடுத்து சுபாசின் வயிற்றில் குத்தினார். இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே கீழே விழுந்தார். இதனை பார்த்த அவரது உறவினர்கள் சுபாசை மீட்டு சிகிச்சைக்காக திருமானூர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த திருமானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுரேசை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்