வாட்டி வதைக்கும் வெயில்: நீலகிரி உள்பட 19 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை

நீலகிரி உள்பட 19 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Update: 2024-05-02 03:19 GMT

சென்னை,

தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் இதுவரை இல்லாத வகையில் இருந்து வருகிறது. வெயிலின் உக்கிரம் அதிகமாக உள்ளதால் மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி உள்ளனர். தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இப்போதே 110 டிகிரியை தொடும் அளவுக்கு வெயில் கொளுத்துகிறது. இதனால் அந்த பகுதிகளுக்கு மஞ்சள் மற்றும் ஆரஞ்சு எச்சரிக்கை நிர்வாக ரீதியாக வானிலை ஆய்வு மையம் விடுத்து வருகிறது.

இந்த நிலையில், தமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப அலை வீசும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதிலும் குறிப்பாக திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, காஞ்சீபுரம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூரில் இயல்பைவிட 5 டிகிரி முதல் 9 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் அதிகரித்து காணப்படும் எனவும், அதில் சில இடங்களில் 110 டிகிரி பாரன்ஹீட்டை ஒட்டி வெயில் பதிவாகலாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த 19 மாவட்டங்களுக்கு 2 நாட்கள் மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்படுள்ளது.

இதுதவிர மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனையொட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்