உளுந்தூர்பேட்டை பஸ் நிலையத்தில், வியாபாரி அடித்துக் கொலை

பழம் விற்பனை செய்வதில் ஏற்பட்ட தகராறில் உளுந்தூர் பேட்டையில் வியாபாரி அடித்துக் கொலை செய்யப்பட்டார்.

Update: 2019-08-15 23:00 GMT
உளுந்தூர்பேட்டை, 

உளுந்தூர்பேட்டையில் உள்ள திருவெண்ணெய் நல்லூர் சாலையை சேர்ந்தவர் ஜாபர் மகன் பாபு (வயது 50). ஜூப்ளி தெருவை சேர்ந்தவர் ஜெகன் (20). இவர்கள் 2 பேரும் உளுந்தூர்பேட்டை பஸ் நிலையத்தில் பழ வியாபாரம் செய்து வந்தனர். இந்த நிலையில் நேற்று மதியம் 2 பேரும் வழக்கம்போல் பஸ் நிலையத்தில் வியாபாரத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த ஒரு பஸ்சில் ஏறி அவர்கள் பயணிகளிடம் பழங்கள் விற்பனை செய்தனர்.

பயணிகளிடம் பழங்கள் விற்பனை செய்வதில் அவர்களுக்கு இடையே திடீரென வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திர மடைந்த ஜெகன், பாபுவை சரமாரியாக தாக்கினார். இதில் காயமடைந்த பாபு மயங்கி விழுந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் கள், பாபு ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்த தகவலின் பேரில் உளுந்தூர்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு பாலசந்தர், இன்ஸ்பெக்டர் எழிலரசி, சப்-இன்ஸ்பெக்டர் ஜெயசந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பாபுவின் உடலை பார்வையிட்டனர். பின்னர் பிரேத பரிசோதனைக் காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் உள்ள பிணவறைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து ஜெகனை போலீசார் கைது செய்தனர்.

கொலையான பாபுக்கு ஜெனிபா என்கிற மனைவியும், உஸ்மான் என்கிற மகனும், ஒரு மகளும் உள்ளனர். இதில் உஸ்மான் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் உளுந்தூர்பேட்டை நகர செயலாளராக உள்ளார். பழம் விற்பனை செய்வதில் ஏற்பட்ட தகராறில் வியாபாரி அடித்துக் கொலை செய்யப் பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்