கூடலூரில் பரிதாபம்: அரசு பஸ் கண்டக்டர் தீக்குளித்து தற்கொலை

கூடலூரில் அரசு பஸ் கண்டக்டர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த பரிதாப சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

Update: 2019-11-10 21:30 GMT
கூடலூர்,

கூடலூர் அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் வசிப்பவர் கந்தசாமி. இவரது மகன் கவிதாசன் (வயது 41). கூடலூர் அரசு போக்குவரத்து கழக கிளையில் பஸ் கண்டக்டராக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். கவிதாசனுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் இடையே தகராறு இருந்து வந்தது.

இந்த நிலையில் கடந்த 5-ந் தேதி கவிதாசன் வழக்கம்போல் வேலைக்கு சென்றுவிட்டு இரவில் வீடு திரும்பினார். அப்போது அவருக்கும், குடும்பத்தினருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.

இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர், 6-ந் தேதி காலை 6.30 மணிக்கு உடலில் மண் எண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். இதில் அவர் படுகாயம் அடைந்தார். மேலும் அவரை காப்பாற்ற முயன்ற கந்தசாமிக்கும் தீக்காயம் ஏற்பட்டது.உடனே அக்கம்பக்கத்தினர் 2 பேரையும் மீட்டு கூடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பிறகு மேல் சிகிச்சைக்காக கேரள மாநிலம் கோழிக்கோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கவிதாசன் அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்று காலை அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கூடலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்