காட்டுமன்னார்கோவில் அருகே, சிறுமி பாலியல் பலாத்காரம் - காதலன் உள்பட 3 பேர் கைது
காட்டுமன்னார்கோவில் அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த அவரது காதலன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
சேத்தியாத்தோப்பு,
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இந்த சிறுமியை மேல்ராதாம்பூரை சேர்ந்த 17 வயது சிறுவன் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த ஒரு ஆண்டாக இவர்கள் காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில் நடுகஞ்சங்கொல்லையில் வடவாறு கரையில் உள்ள அரச மரத்தின் கீழ் பகுதிக்கு சிறுமியை அவரது காதலன் அழைத்து சென்றான். அங்கு சிறுமியை கட்டாயப்படுத்தி, பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். இதன் பின்னர் சிறுமியை மிரட்டி பல முறை அவன் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
இந்த விவரத்தை தனது நண்பர்களான நடுகஞ்சங்கொல்லையை சேர்ந்த ராமச்சந்திரன் மகன் சூரியபிரகாஷ்(19), ராமலிங்கம் மகன் விக்னேஷ்வரன்(21) ஆகியோரிடம் தெரிவித்துள்ளான். தொடர்ந்து சூரியபிரகாஷ், சிறுமியை மிரட்டி நடுகஞ்சங்கொல்லையில் உள்ள வீரன் கோவில் அருகே அழைத்து சென்று பலாத்காரம் செய்தார். மேலும் விக்னேஷ்வரன், சிறுமியின் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சென்று அவரை மிரட்டி பலாத்காரம் செய்துள்ளார். இதை யாரிடமும் சொல்லக்கூடாது என்று 3 பேரும் மிரட்டியுள்ளனர்.
இந்த நிலையில் உடல்நலம் பாதிக்கப்பட்ட சிறுமி காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டாள். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக சிதம்பரம் அண்ணாமலைநகர் ராஜாமுத்தையா மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அங்கு உரிய சிகிச்சை பெற்றாள்.
இந்த நிலையில் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து பெற்றோரிடம் கூறி கதறி அழுதாள். தொடர்ந்து சிறுமியின் அண்ணன் சேத்தியாத்தோப்பு அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து துணை போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர்லால் உத்தரவின் பேரில், இன்ஸ்பெக்டர் ஆக்னேஸ்மேரி, சப்-இன்ஸ்பெக்டர் திரிபுரசுந்தரி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து சிறுமியின் காதலன், நண்பர்களான சூரியபிரகாஷ், விக்னேஷ்வரன் ஆகியோரை கைது செய்தனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.