தூத்துக்குடி அருகே, கார் மோதி 2 வாலிபர்கள் பலி

தூத்துக்குடி அருகே கார் மோதி 2 வாலிபர்கள் பலியானார்கள்.

Update: 2019-12-01 22:15 GMT
தூத்துக்குடி, 

கேரள மாநிலம் புனலூர் அஞ்சலி கிராமத்தை சேர்ந்தவர்கள் சுதன் (வயது 23), இஸ்மாயில் (23). இவர்கள் 2 பேரும் தூத்துக்குடி அருகே தட்டப்பாறை பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பிளம்பராக வேலை பார்த்து வந்தனர். இவர்கள் நேற்று முன்தினம் இரவில் பணி முடித்து விட்டு நிறுவனம் அருகே சாலையோரம் நடந்து வந்து கொண்டு இருந்தனர்.

அப்போது அந்த வழியாக ஒரு கார் வந்தது. அந்த கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து எதிர்பாராத விதமாக சாலையோரத்தில் சென்று கொண்டு இருந்த சுதன், இஸ்மாயில் ஆகியோர் மீது மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட பலத்த காயம் அடைந்த சுதன், இஸ்மாயில் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். இதை பார்த்த கார் டிரைவர் உடனடியாக அங்கு இருந்து தப்பிச் சென்று விட்டார். 2 பேர் பலியாகி கிடந்ததை பார்த்த அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அவர்கள் புதுக்கோட்டை போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துப்பாண்டி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் 2 பேரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து புதுக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். கார் மோதி 2 வாலிபர்கள் பலியான சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்