தொப்பூர் தர்காவுக்கு வந்தபோது ரெயிலில் இருந்து தவறி விழுந்த பெண் சாவு

தொப்பூர் தர்காவுக்கு வந்த போது ரெயிலில் இருந்து தவறி விழுந்து பெண் பரிதாபமாக இறந்தார்.

Update: 2019-12-08 22:15 GMT
நல்லம்பள்ளி,

பெங்களூரு-காரைக்கால் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று பெங்களூருவில் இருந்து சேலம் நோக்கி வந்தது. இந்த ரெயில் தர்மபுரி மாவட்டம் தொப்பூர் ரெயில் நிலையத்தில் நின்றது. கூட்டம் அதிக அளவில் இருந்ததால் பயணிகள் முண்டியடித்து கீழே இறங்கினர். அதற்குள் ரெயில் புறப்பட்டது. இதனால் படிக்கட்டில் நின்றிருந்த ஒரு பெண் தவறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார்.

இதனால் பயணிகள் சத்தம் போட்டதால் ரெயில் நிறுத்தப்பட்டது. உடனே அக்கம் பக்கத்தினர் அந்த பெண்ணை மீட்டு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே அந்த பெண் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தர்மபுரி ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் ரெயில்வே போலீசார் ஆஸ்பத்திரிக்கு சென்று விசாரணை நடத்தினர்.

போலீசார் விசாரணை

அப்போது அந்த பெண் பெங்களூருவை சேர்ந்த ரீகானா (வயது 43) என்பதும், தொப்பூர் தர்காவுக்கு வந்த போது ரெயிலில் இருந்து தவறி விழுந்து இறந்ததும் தெரியவந்தது. இதையடுத்து ரெயில்வே போலீசார் அந்த பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்