மது குடிக்க பணம் தராததால் மூதாட்டியை கொன்ற வாலிபர் கைது பரபரப்பு வாக்குமூலம்

ஆட்டையாம்பட்டியில் மது குடிக்க பணம் தராததால் மூதாட்டியை கொன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2020-01-04 22:15 GMT
ஆட்டையாம்பட்டி,

சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி பூக்கார செல்லப்பன் தெருவை சேர்ந்த கந்தசாமி மனைவி பார்வதி (வயது 75). இவர் கடந்த 2-ந் தேதி வீட்டில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். மேலும் அவர் கழுத்தில் அணிந்திருந்த செயின், வளையல் உள்ளிட்ட 16 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸ் துணை சூப்பிரண்டு ஆனந்தன், ஆட்டையாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் குலசேகரன் ஆகியோர் விசாரணை நடத்தினர்.

மேலும் மூதாட்டியின் உடல் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுதொடர்பாக மூதாட்டியின் மகன் சீனிவாசன் கொடுத்த புகாரின்பேரில் ஆட்டையாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை தேடி வந்தனர்.

இந்தநிலையில் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் மூதாட்டி பார்வதியை அதே பகுதியை சேர்ந்த ராஜா என்பவரது மகன் குமார் (31) கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து குமாரை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீசார் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

பரபரப்பு வாக்குமூலம்

இதையடுத்து அவர் போலீசார் குமாரிடம் நடத்திய விசாரணையில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அதன் விவரம் வருமாறு:-

கொலையான பார்வதியின் வீட்டின் அருகில் நான் வசித்து வருகிறேன். அவருக்கு நான், சிறு சிறு உதவிகள் செய்து வந்தேன். எனக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இதனால் பார்வதியிடம் அடிக்கடி மது குடிக்க பணம் கேட்டு வாங்கி சென்றேன்.

இந்தநிலையில் சம்பவத்தன்று மீண்டும் மது குடிக்க பணம் கேட்டேன். அதற்கு அவர் பணம் தர மறுக்கவே எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

இதனால் ஆத்திரமடைந்த நான் அங்கு கிடந்த கரண்டியை எடுத்து மூதாட்டியை தாக்கினேன். இதில் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே அவர் இறந்து விட்டார். உடனே செய்வதறியாது திகைத்த நான், மூதாட்டி அணிந்திருந்த நகையை கொள்ளையடித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டேன். பின்னர் போலீசாரிடம் சிக்கி கொண்டேன்.

இவ்வாறு அவர் தனது வாக்கு மூலத்தில் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்