கேரளாவில் கார் - லாரி நேருக்குநேர் மோதி விபத்து: சிறுவன் உள்பட 5 பேர் பலி

கேரளாவில் கார் - லாரி நேருக்குநேர் மோதிய விபத்தில் சிறுவன் உள்பட 5 பேர் உயிரிழந்தனர்.

Update: 2024-04-30 06:23 GMT

திருவனந்தபுரம்,

கேரளா மாநிலம் காசர்கோடு மாவட்டம் சூரிக்காடு பீமநதி பகுதியை சேர்ந்தவர் சுதாகரன் (வயது 52). இவரது மனைவி அஜிதா (வயது 35). இவர்களுக்கு சவுரவ் என்ற மகன் இருக்கிறார். சவுரவ் கோழிக்கோட்டில் சி.ஏ படிப்பதற்கு, அங்குள்ள கல்லூரி ஒன்றில் சேர்ந்துள்ளார்.

சவுரவ்வை கல்லூரி விடுதியில் விட்டுவிட்டு வருவதற்காக சுதாகரன், அவரது மனைவி, மாமனார் கிருஷ்ணன் (65) மற்றும் அஜிதாவின் அண்ணன் மகன் ஆகாஷ்(9) ஆகியோர் காரில் தலச்சேரியில் இருந்து காசர்கோடு நோக்கி சென்றனர்.

காரை காசர்கோடு மாவட்டம் காளிச்சநடுக்கம் சாஸ்தம்பாறை பகுதியை சேர்ந்த பத்மகுமார் (வயது 59) என்பவர் ஓட்டி சென்றார். சவுரவ்வை விடுதியில் விட்டுவிட்டு சுதாகரன் உள்ளிட்ட மற்றவர்கள் காரில் திரும்பி வந்தனர். அவர்களது கார் கண்ணூர் செருக்குன்னு அருகே உள்ள புன்னச்சேரி பகுதியில் நேற்று இரவு வந்து கொண்டிருந்தது.

அப்போது அவர்களுக்கு பின்னால் வந்த ஒரு லாரி, காரின் மீது மோதியதாக தெரிகிறது. இதனால் அவர்களது கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து எதிரே கியாஸ் சிலிண்டர்கள் ஏற்றிக்கொண்டு வந்த லாரி மீது நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. இதில் காருக்குள் இருந்தவர்கள் லாரியின் முன்புறம் சிக்கி கொண்டனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் முதலில் லாரிக்குள் சிக்கியிருந்த காரை வெளியே எடுத்தனர். பின்பு காரில் இருந்தவர்களை மீட்டனர். அப்போது காரில் இருந்த சுதாகரன், அவரது மனைவி அஜிதா, மாமனார் கிருஷ்ணன், காரின் டிரைவர் ஆகிய 4 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தன்ர்.

மேலும் அந்த காரில் இருந்த சிறுவன் ஆகாஷ் படுகாயங்களுடன் மீட்ட போலீசார், அவனை அருகில் உள்ள       மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனால் இந்த விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் 2 லாரிகளின் டிரைவர்களையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்