தனித்தனி விபத்தில், தையல்காரர் உள்பட 2 பேர் சாவு

தனித்தனி விபத்தில் தையல்காரர் உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.

Update: 2020-01-05 22:00 GMT
கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி அருகே கூத்தக்குடி கிராமத்தை சேர்ந்தவர் அருள்தாஸ் (வயது 47). இவர் கூத்தக்குடி மெயின் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் அருள்தாஸ் பலத்த காயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அருள்தாஸ் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள முட்டியூர் கிராமத்தை சேர்ந்தவர் சந்திரசேகரன்(43), தையல்காரர். சம்பவத்தன்று இவர் தனது மோட்டார் சைக்கிளில் திண்டிவனத்தில் இருந்து சொந்த ஊருக்கு புறப்பட்டார். மயிலம் சாலையில் சென்றபோது, இருசக்கர வாகனம் ஒன்று குறுக்கே வந்ததால், திடீர் பிரேக் போட்டார். அப்போது அவர் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிளுடன் கீழே விழுந்து விட்டார். இதில் பலத்த காயமடைந்த அவரை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சந்திரசேகரன் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து திண்டிவனம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்